கர்நாடக சட்டசபை தேர்தல்: ஜனநாயக கடமை.. தாலி கட்டிய கையோடு வாக்களிக்க வந்த மணமக்கள்..பாராட்டிய மக்கள்
பெங்களூர்: கர்நாடக சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்கு சென்று குடும்பத்துடன் மணமக்கள் ஓட்டு போட்டதை அங்கிருந்த சக வாக்காளர்கள் பாராட்டினர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் அம்மாநில சட்டப்பேரவைக்கு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதன்படி, கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10 (இன்று) ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி நிறைவு பெற்றது. கடந்த 21 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 24 என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன்படி, கர்நாடக தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 223 வேட்பாளர்களும் ஜேடிஎஸ் கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
918 சுயேச்சைகளும் தேர்தல் கோதாவில் உள்ளனர். கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்களர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை காண முடிகிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் டிகே சிவக்குமார் உள்பட அரசியல் தலைவர்கள் முதல் கர்நாடக மாநில பிரபலங்கள் வரை பலரும் வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மைசூருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் தங்கள் வாக்கினை செலுத்த வந்தனர். மணக்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் வாக்களிக்க வந்து இருந்தனர்.
திருமண தினத்தன்றும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஆர்வத்துடன் வந்திருந்த மணமக்களை அங்கிருந்த சக வாக்காளர்கள் பாராட்டியதை காண முடிந்தது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டபேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications