'கருநாடகா'- நேற்று ஆட்சியை கவிழ்த்த பாஜக... நாளைக்கு கை கோர்த்து ஆட்சி அமைக்கவும் தயாராகும் ஜேடிஎஸ்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கர்நாடகாவில் இம்முறையும் தொங்கு சட்டசபைதான் உருவாகும்; மீண்டும் கிங் மேக்கராகலாம் என கனவுகளுடன் அரியாசனத்தை கைப்பற்ற தயாராகிக் கொண்டிருக்கின்றது தேவகவுடா குடும்பம்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் 73.19% வாக்குகள் பதிவாகி உள்ளன. கர்நாடகா தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே ஏராளமான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இக்கருத்து கணிப்புகளில் ஒன்றிரண்டுதான் காங்கிரஸ் அல்லது பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என கணித்துள்ளன.

பொதுவான கருத்து கணிப்பு முடிவுகள், கர்நாடகாவில் மீண்டும் தொங்கு சட்டசபைதான் உருவாகும் என கணித்திருக்கின்றன. இம்மாநிலத்தில் 2004, 2008 மற்றும் 2018-ல் தொங்கு சட்டசபைதான் உருவானது. தொங்கு சட்டசபை உருவானால் வழக்கம் போல தேவகவுடா குடும்பத்தின் ஜேடிஎஸ் கட்சி, கிங் மேக்கராகும்.
தேவகவுடா குடும்பம் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்கிற பெயரை கட்சி அளவில்தான் வைத்துள்ளது. நடைமுறையில் பாஜக அல்லது காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடனும் எவ்வித தயக்கமுமே இல்லாமல் கை கோர்க்கக் கூடிய கட்சிதான் அது. தேவகவுடா குடும்பத்தின் ஜேடிஎஸ் கட்சிக்கு எந்த ஒரு சித்தாந்தமும் கிடையாது. பழைய மைசூர் பிராந்தியத்தில் ஒக்கலிகா கவுடா சமூகத்தினர் தயவில் கணிசமான இடங்களைப் பெற்று கிங் மேக்கராகவே வலம் வருகிறது ஜேடிஎஸ்.
2018 தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸுடன் இணைந்து ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. வழக்கம் போல முதல்வர் பதவியையும் பெற்றுக் கொண்டது. ஆனால் பாஜகவோ இந்த ஆட்சியை நீடிக்க விடாமல் கவிழ்த்தது. இதனால் பாஜகவை ஜேடிஎஸ் பரம எதிரியாகப் பார்க்கப் போவதும் கிடையாது. நேற்று வரை நட்பாக இருந்த காங்கிரஸை தொடர்ந்து நட்பு சக்தியாக ஜேடிஎஸ் பார்க்கப் போவதும் கிடையாது.
தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபை உருவானால் பாஜக அல்லது காங்கிரஸுடன் சில பல நிபந்தனைகள் அடிப்படையில் முதல்வர் நாற்காலியை ஜேடிஎஸ் பெற்றுத்தான் தீரும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தால் ஜேடிஎஸ் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் பழைய மைசூர் பிராந்தியம்- அதாவது ஒக்கலிகா கவுடா வாக்குகளில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களைத்தான் ஜேடிஎஸ் சரிபாதியாக பிரித்து எடுக்கிறது; அதனால் இத்தேர்தலுடன் ஜேடிஎஸ்க்கு முடிவுரை எழுத வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications