பஜ்ரங்தள் தொண்டர் கொலைக்கு முஸ்லீம்களை தூண்டியது டி.கே.சிவகுமார்: கர்நாடக 'சர்ச்சை அமைச்சர்' கருத்து
பெங்களூரு: கர்நாடகாவில் பஜ்ரங்தள் எனும் இந்துத்துவா அமைப்பின் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டதற்கு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவகுமார் பேச்சுதான் காரணம் என விமர்சித்து மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா.
ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக பூத் முகவர்.. தட்டித் தூக்கிய மதுரை போலீசார்.. 4 பிரிவுகளின் கீழ் வழக்கு
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசில் அமைச்சராக இருப்பவர் ஈஸ்வரப்பா. அண்மையில் டெல்லி செங்கோட்டையில் காவி கொடி ஒருநாள் தேசிய கொடியாக பறக்கும் என பேசியிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது.
காங்கிரஸ் போராட்டம்
ஈஸ்வரப்பாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் தாம் எமர்ஜென்சியையே பார்த்திருக்கிறேன்... சிறைக்கு போயிருக்கிறேன்.. ராஜினாமா செய்ய முடியாது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தார் ஈஸ்வரப்பா.
பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலை
இந்நிலையில் கர்நாடகாவின் ஷிமோகா நகரில் பஜ்ரங் தள் எனும் இந்துத்துவா அமைப்பின் நிர்வாகி ஹர்ஷா (வயது 23) மர்ம நபர்களால் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து ஷிமோகாவில் வன்முறை வெடித்தது. அப்பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கடைகள் மீது கல்லெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஷிமோகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷிமோகாவில் பதற்றம் நிலவி வருகிறது.
சிவகுமார் பேச்சுதான் காரணம்
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஈஸ்வரப்பா, முஸ்லிம் குண்டர்கள்தான் ஹர்ஷாவை படுகொலை செய்துள்ளனர். தேசியக் கொடிக்கு பதில் காவி கொடி டெல்லி செங்கோட்டையில் பறக்கும் என நான் பேசியது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது கருத்துகள்தான் முஸ்லிம் குண்டர்களை தூண்டிவிட்டது. இதனை எல்லாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்றார். ஈஸ்வரப்பாவின் இந்த கருத்தும் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
உள்துறை அமைச்சர் விளக்கம்
அதேநேரத்தில் கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், ஹிஜாப் விவகாரத்துக்கும் பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த ஒரு முடிவுக்கும் வரும் முன்னதாக விசாரணைகள் நிறைவடைய வேண்டும். தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார்.