பாராசிட்டமால் மாத்திரை உள்பட 15 மருந்துகளுக்கு தடை.. கர்நாடகாவில் அதிரடி.. முழு லிஸ்ட் இதோ
பெங்களூர்: கர்நாடகாவில் பாராசிட்டமால் உள்பட 15 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து அந்த மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த மாத்திரை, மருந்துகளை ஆய்வகத்தில் பரிசோதித்தபோது கிடைத்த முடிவில் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படுத்துவது உறுதியான நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சராக தினேஷ் குண்டுராவ் செயல்பட்டு வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை உள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாத்திரை, மருந்துகளின் தரம் குறித்து மே மாதம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின் முடிவில் சில மாத்திரை, மருந்துகளின் தரம் குறைவாக இருந்தது. இந்த மாத்திரை, மருந்துகளை மக்கள் பயன்படுத்தும்போது அது உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மாத்திரை, மருந்துகள் என்று 15 தயாரிப்புகளுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மைசூருவில் உள்ள அபான் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த பாராசிட்டமால் மாத்திரையான போமோல்-650 (Pomol - 650), மைசூருவை தளமாகக் கொண்ட என் ரங்கா ராவ் & சன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த ஓ சாந்தி கோல்ட் கிளாஸ் கும்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
மேலும் அல்ட்ரா லேபரேட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் டாம் பிரான் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் இன்ஜெக்சன் ஐபி, பயோன் தெரபியூட்டிக்ஸின் மிட்டு க்யூ7 சிரப் (Mitu Q7 Syrup), ஸ்வெஃப்ன் பார்மாசூட்டிகல்ஸின் பான்டோகாட்-டிஎஸ்ஆர் காப்ஸ்யூல்கள், புனிஸ்கா இன்ஜெக்டபிள்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் சோடியம் குளோரைடு இன்ஜெக்சன் ஐபி 0.9% w/v உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சேஃப் பேரன்டெரல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கோழி தடுப்பூசிகளுக்கான ஸ்டெரைல் டைலூயன்ட்கள் போன்ற கால்நடை பொருட்கள் மற்றும் கிளிமிஸ்-2 (கிளிமிபிரைடு மாத்திரைகள்), அயர்ன் சுக்ரோஸ் இன்ஜெக்சன் (இரோகெய்ன்) மற்றும் பைராசிட்-ஓ சஸ்பென்ஷன் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது.
இப்படியாக மாத்திரை, மருந்துகள், சிரப்புகள், கால்நடை தடுப்பூசிகள் என்று மொத்தம் 15 தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பொருட்களை மருந்தகங்களில் விற்பனை செய்யவும், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கவும் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications