கர்நாடகா பாஜக செம்ம ஹேப்பி.. முதல்வர் பதவியை விட்டுத்தர சித்தராமையா மறுப்பு- டிகே சிவகுமார் அப்செட்!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவி விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் இடையே வெடிக்க தொடங்கியிருக்கும் மோதல் கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதால் பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சர்ச்சை வெடித்தது. கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக உள்ள டிகே சிவகுமார் தமக்குதான் முதல்வர் பதவி என்பதில் பிடிவாதம் காட்டினார். ஆனால் சித்தராமையா முதல்வர் பதவியை பெறுவதில் முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றார்.

முதல்வர் பதவி பகிர்வு: இதனையடுத்து சித்தராமையா முதல்வராகவும் துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவியேற்றனர். அப்போதே சித்தராமையா இரண்டரை ஆண்டுகள் முதல்வராகவும் டிகே சிவகுமார் அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல்வராகவும் இருப்பார் எனவும் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பாஜகவின் ஆரூடம்: இருந்த போதும் டிகே சிவகுமார் ஆதரவு ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு சித்தராமையா ஆதரவாளர்கள் பதில் தருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும்; லோக்சபா தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் என பாஜக இடைவிடாமல் ஆரூடம் கூறி வருகிறது.
டிகேஎஸ் ஆதரவாளர்கள் கலகம்: இப்போது முதல்வர் பதவி தொடர்பாக உச்சகட்ட மோதல் காங்கிரஸில் வெடித்துள்ளது. மண்டியா தொகுதி எம்.எல்.ஏவும் டிகே சிவகுமாரின் ஆதரவாளருமான ரவிக்குமார் கவுடா, அடுத்த 2.5 ஆண்டுகள்தான் சித்தராமையா முதல்வர்; அதன்பின்னர் டிகே சிவகுமார் முதல்வராக பதவி ஏற்பார் என்றார்.
டிகேஎஸ்-க்கு எதிராக சித்து சதி: இதற்கு பதிலடி தரும் வகையில் சித்தராமையா அதிரடி வியூகம் வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் இல்லத்தில் சில நாட்களுக்கு முன்னர் திடீர் விருந்துக்கு சித்தராமையா ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில் டிகே சிவகுமாருக்கு எதிரான சித்தராமையா ஆதரவாளர்கள் பங்கேற்றனர். சித்தராமையா தமக்குப் பின்னர் டிகே சிவகுமாருக்கு பதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரை முதல்வராக்கும் சதித் திட்டத்துடன் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் எனவும் கூறப்பட்டது.
சித்தராமையா பேச்சும் டிகேஎஸ் மவுனமும்: இந்நிலையில் சித்தராமையா பகிரங்கமாக முதல்வர் பதவி குறித்து பேசியிருக்கிறார். கர்நாடகா முதல்வராக தாம் 5 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடிப்பேன் என வெளிப்படையாக அறிவித்துள்ளார் சித்தராமையா. அவரது இந்த கருத்துக்கு பதில் தர டிகே சிவகுமார் மறுத்துவிட்டார். அத்துடன் தமது ஆதரவாளர்களையும் பொதுவெளியில் சித்தராமையாவை விமர்சித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார் சித்தராமையா. இதனால் கர்நாடகா காங்கிரஸில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது கர்நாடகா பாஜக தலைவர்களை ரொம்பவே மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications