"அது இந்து கோயில் ஆச்சே!" முஸ்லீம் வியாபாரிகள் மீது தாக்குதல்! புதிய சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்எல்ஏ
பெங்களூர்: கர்நாடகாவில் சமீபத்தில் இந்து கோயில் முன்பு இருந்து முஸ்லீம் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்,
அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முதலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அங்குப் பல வாரங்கள் பிரச்சினை தொடர்ந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பின்னரே இந்த விவகாரத்தில் சற்று அமைதி ஏற்பட்டது.

கர்நாடகா
அதைத் தொடர்ந்து மீண்டும் ஹலால் இறைச்சி தொடர்பாகச் சிலர் பிரச்சினைகளைக் கிளப்பினர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இப்போது அடுத்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது கர்நாடகாவின் தர்வாத்தில் ஹனுமன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வாசலில் அனைத்து மதத்தினரும் கடை வைத்துள்ளார்கள். குறிப்பாக இஸ்லாமியர்கள் அங்குப் பழக்கடைகளை நடத்தி வந்தனர்.

ஸ்ரீராம் சேனா அமைப்பு
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன், அங்குத் திரண்ட ஸ்ரீராம் சேனா அமைப்பின் உறுப்பினர்கள் இஸ்லாமியர்களின் கடைகளை துவம்சம் செய்தனர். இந்துக்களின் கோயில் வாசலில் முஸ்லீம் கடை வைக்கக் கூடாது என்று மிரட்டிய அவர்கள், மீறிக் கடை வைத்தால் இப்படி துவம்சம் செய்வோம் என்றும் மிரட்டினர். இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்ச்சை கருத்து
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு ஹூப்ளி-தர்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது ஒரு இந்துக் கோயில். அவர் முஸ்லீமாக இருந்தாலும் எப்படி இருக்க வேண்டும் என்று இருக்கிறது. இந்து கோயில் முன்பு, தாடி உடன், மீசையை மழித்து, பைஜாமா அணிந்து கொண்டு இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இந்து பக்தர்கள் எப்படி உணர்வார்கள்?" என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார்.

பசவராஜ் பொம்மை
முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "சட்ட ஒழுங்கை யாரும் கையில் எடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். கடந்த சில மாதங்களாகக் கர்நாடகாவில் வகுப்புவாதப் பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், பசவராஜ் பொம்மை இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.

எடியூரப்பா
அதேபோல முன்னாள் முதல்வர் என்எஸ் எடியூரப்பாவும் இதுபோன்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் இங்கு மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற தேவையற்ற சிக்கல்களை ஒதுக்கி வைத்து விட்டு நமது வேலைகளைச் செய்வோம். முஸ்லிம்கள் அமைதியான மற்றும் மரியாதையான வாழ்க்கையை வாழ வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications