1 மாஸ்க் விலை ரூ485... கர்நாடகா பாஜக ஆட்சியில் ரூ40,000 கோடி 'கொரோனா' ஊழல்- பாஜக எம்.எல்.ஏ 'பகீர்'!
பெங்களூர்: கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் கொரோனா காலத்தில் மட்டும் ரூ40,000 கோடி ஊழல் நடைபெற்றதாகவும் 1 மாஸ்க் விலை ரூ485-க்கு கொள்முதல் செய்ததாகவும் பாஜக எம்.எல்.ஏ. பசன்கவுடா பாட்டீல் யத்னால் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்தார் எம்.எல்.ஏ. யத்னால். ஆனால் எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு மாநில பாஜக தலைவர் பதவி கிடைத்தது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார் யத்னால்.

அத்துடன் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திராவுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் கோரொனா காலத்தில் மட்டும் ரூ40,000 கோடி ஊழல் நடைபெற்றதாகவும் பட்டியல் வெளியிட்டுள்ளார் யத்னால்.
இது தொடர்பாக பசன்கவுடா பாட்டீல் யத்னால் கூறியதாவது: கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் ரூ45 மதிப்புள்ள 1 மாஸ்க் ரூ485-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் படுக்கைகளை வாடகைக்கு எடுத்தனர். மருத்துவமனைகளில் வாடகைக்கு படுக்கைகளை எடுத்து விட்டு வாடகைக்கும் ஒரு தொகை, அதே படுக்கையை கொள்முதல் செய்ததாகவும் ஒரு தொகை குறிப்பிட்டு கொள்ளையடித்தனர். ஒரு படுக்கைக்கு ரூ20,000 என மதிப்பிட்டு கொள்ளையடித்தது எடியூரப்பா கோஷ்டி. இப்படித்தான் ரூ40,000 கோடி கொள்ளையடித்தனர். இதற்கான அத்தனை ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. இதற்காக என்னை பாஜகவில் இருந்து நீக்கினாலும் கவலைப்படமாட்டேன். இவ்வாறு யத்னால் எம்.எல்.ஏ. கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பாஜக ஊழல் ஆட்சியை நடத்தியது என்பதற்கு அக்கட்சியின் எம்.எல்.ஏ. யத்னால் குற்றச்சாட்டுகளே ஆதாரம். அவரும் போகிற போக்கில் இதை சொல்லாமல் ஆதாரங்களையும் வெளியிட வேண்டும். கொரோனா கால ஊழல் தொடர்பான விசாரணை ஆணையத்திடம் இந்த ஆதாரங்களை யத்னால் தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பாஜக எம்.எல்.ஏ.வின் இந்த பகீர் குற்றச்சாட்டுகளால் டெல்லி மேலிடமும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம். யத்னாலை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளை ஒரு பக்கம் எடியூரப்பா தரப்பும் மேற்கொண்டிருப்பதாகவும் அம்மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications