தலித்களுக்கு பதவி தராம உயர் ஜாதியினரை மட்டும் மத்திய அமைச்சராக்குறாங்க.. பாஜகவை விளாசிய சொந்த எம்பி
பெங்களூர்: பாஜகவில் உயர் ஜாதியினருக்கு தான் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. ஒரு தலித் தலைவராக தென்னிந்தியாவில் 7 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன். பாஜக தலித்துகளுக்கு எதிரான கட்சி என்பதை நான் முன்கூட்டியே அறிந்து இருக்க வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்பி ரமேஷ் ஜிகஜினகி கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசாரம் மேற்கொண்டது. ஆனால் மக்கள் வேறு விதமான தீர்ப்பை வழங்கினர். அதாவது பாஜக 240 தொகுதிகள், கூட்டணி கட்சிகள் 53 இடங்கள் என மொத்தம் 293 இடங்கள் மட்டுமே பாஜக கூட்டணிக்கு கிடைத்தது.

நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் மெஜாரிட்டிக்கு 272 இடங்கள் தேவை. அந்த வகையில் பாஜக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளன. இதையடுத்து மத்தியில் பாஜக தனது கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதையடுத்து நரேந்திர மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராகி உள்ளார்.
அதன்பிறகு மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளின் எம்பிக்களை சேர்த்து பாஜக எம்பிக்களும் மத்திய அமைச்சர்களாக உள்ளன. மொத்தம் 81 பேர் வரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் என்ற நிலையில் தற்போது பிரதமர் மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தான் பாஜக திலித்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், கர்நாடகா எம்பியுமான ரமேஷ் ஜிகஜினகி பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். ரமேஷ் ஜிகஜினகி கர்நாடகா பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவர் கடந்த 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 என தொடர்ந்து 7 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் சிக்கோடி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரமேஷ் ஜிகஜினகி அதன்பிறகு தொடர்ந்து விஜயாப்பூர் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை பிரதமர் மோடி அமைச்சரவையில் குடிநீர் மற்றும் வடிகால் துறையின் மத்திய இணையமைச்சராக செயல்பட்டார். இந்த முறை மீண்டும் ரமேஷ் ஜிகஜினகி விஜயாப்புரா தொகுதியில் வென்ற நிலையில் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி என்பது கிடைக்கவில்லை.
இதனால் அவர் மிகவும் மன உடைந்துபோய் உள்ளது. இத்தகைய சூழலில் தான் பாஜக தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்று விமர்சனம் செய்துள்ளார். அதாவது மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதது பற்றி ரமேஷ் ஜிகஜினகியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் காட்டமாக பதிலளித்தார். இதுதொடர்பாக ரமேஷ் ஜிகஜினகி கூறியதாவது:
நான் மத்திய அமைச்சர் பதவியை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதேவேளையில் மக்கள் ஆதரவு எனக்கு தேவை. மக்களின் ஆதரவு என்பது எனக்கு உள்ளது. இந்த முறை நான் வென்ற பிறகு என்னை பலரும் திட்டினர். பல தலித் தலைவர்கள் பாஜக தலித் தலைவர்களுக்கு எதிரான கட்சி என்று என்னிடம் வாக்குவாதம் செய்தனர். உண்மையில் நான் அதனை பாஜகவில் இணைவதற்கு முன்பே அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஏனென்றால் தென்னிந்தியாவில் ஒரு தலித் தலைவராக தொடர்ந்து நான் 7 லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளேன். இத்தகைய சூழலில் அனைத்து உயர் ஜாதிகளை சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சரவையில் கேபினட் பொறுப்பில் பதவி வகிக்கின்றனர். ஆனால் தலித்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் பாஜகவை தலித்துகள் ஆதரிக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. இது என்னை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications