சிஎம் பதவிக்கு பிடிவாதம்! கார்கேவை சந்தித்த டிகே சிவக்குமார்-சித்தராமையா! காங்கிரஸில் புதிய சிக்கல்
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேசிய நிலையில் இருவரும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க விரும்பாமல் பிடிவாதம் பிடிப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 10ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. கடந்த 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. மொத்தம் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135, பாஜக 66, ஜேடிஎஸ் 19, மற்றவர்கள் 4 தொகுதிகளில் வென்றன.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து மீண்டும் கர்நாடகா அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

சித்தராமையா நேற்றே டெல்லி சென்ற நிலையில் டிகே சிவக்குமார் இன்று டெல்லிக்கு பறந்தார். இதற்கிடையே தான் இன்று காலையில் கர்நாடகா முதல்வர் பதவியை இருவரில் யாருக்கு வழங்குவது என்பது குறித்து கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் தேசிய பொறுப்பாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சித்தராமையா அல்லது டிகே சிவக்குமார் ஆகியோரில் ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்குவது பற்றியும், இதில் எம்எல்ஏக்களின் ஆதரவு அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்கி இன்னொருவரை சமாதானப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் டெல்லியில் இன்று மாலை மல்லிகார்ஜூன கார்கேவை டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் தனித்தனியே சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும். தன்னால் காங்கிரஸ் கட்சி எப்படி லாபமடைந்தது என்பது பற்றியும், தனக்கு ஏன் முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்து கூறினார் டிகே சிவக்குமார்.
அதேபோல் சித்தராமையாவும் இன்று மாலை 6 மணிக்கு டிகே சிவக்குமார் சந்திப்பு முடிந்த பிறகு மல்லிகார்ஜூன கார்கேவின் வீட்டுக்கு சென்று சந்தித்தார். அப்போது அவர் எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு தான் அதிகம் இருப்பதை சுட்டிக்காட்டியும், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்கள் உள்பட அனைத்து மக்களிடமும் செல்வாக்கு உள்ளதால் தன்னை முதல்வராக்க வேண்டும் எனவும் அவர் எடுத்து கூறினார்.
மேலும் இந்த சந்திப்பின்போது டிகே சிவக்குமார் தனக்கு முதல்வர் பதவி கட்டாயம் வேண்டும். இல்லாவிட்டால் வேறு எந்த பதவியும் வேண்டாம். எம்எல்ஏவாகவும், கர்நாடகா காங்கிரஸ் தலைவராகவே தொடர உள்ளேன் என கறாராக கூறினார். அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவரவில்லை. அதேபோல் சித்தராமையாவும் கார்கேவிடம் தனக்கு தான் முதல்வர் பதவி வேண்டும். இது தனக்கு கடைசி தேர்தல் என்பதாலும், எம்எல்ஏக்களில் அதிகமானவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பதாலும் முதல்வர் பதவியை கண்டிப்பாக வழங்க வேண்டும் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் கர்நாடகா முதல்வர் பதவியை சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் என 2 பேரும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே முதல்வர் பதவி தொடர்பாக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவிலும் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் காங்கிரஸ் மேலிடம் கையை பிசைந்து கொண்டு முதல்வர் யார்? என்பதை அறிவிப்பதில் தாமதம் காட்டி வருகிறது. இதனால் கர்நாடகா அரசியல் களம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications