அமலாக்கத்துறை சதிக்கு எதிராக கர்நாடகா சட்டசபை வளாகத்தில் முதல்வர் சித்தராமையா திடீர் போராட்டம்!
பெங்களூர்: கர்நாடகாவில் வால்மீகி வாரிய முறைகேட்டில் தமக்கு எதிராக சதி செய்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகளைக் கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று போராட்டம் நடத்தினார். அமலாக்கத்துறைக்கு எதிராக கர்நாடகா சட்டசபை வளாகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் சித்தராமையா தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தின் போது அமலாக்கத்துறைக்கு எதிராக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்மீகி வாரிய நிதி முறைகேடு விவகாரத்தில் அம்மாநில முன்னாள் அமைச்சர் நாகேந்திரா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், முதல்வர் சித்தராமையாவை தொடர்புபடுத்தி வாக்குமூலம் தருவதற்கு நெருக்கடி தருவதாக அரசு அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மித்தல், முரளி கண்ணன் ஆகியோர் மீது கர்நாடகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று கர்நாடகா சட்டசபை வளாகத்தில் முதல்வர் சித்தராமையா தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தில் முதல்வர் சித்தராமையாவுடன் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் இணைந்தனர்.
கர்நாடகா சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது அமலாக்கத்துறைக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அமலாகத்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் பதாகைகளையும் அமைச்சர்கள் ஏந்தி இருந்தனர்.
என்ன விவகாரம்?: வால்மீகி வாரிய அதிகாரி சந்திரசேகர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக நிதி முறைகேடுகள் தொடர்பாக கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் துறை அமைச்சர் நாகேந்திரா பதவி விலகினார். பின்னர் நாகேந்திராவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகா அரசு அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரிலேயே வால்மீகி வாரிய நிதி, வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது என வாக்குமூலம் தர வேண்டும்; இல்லையெனில் சிறைக்கு அனுப்புவோம்; ஜாமீன் கிடைக்காது என அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் மீது பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications