‛‛முதல் விக்கெட்’’.. கர்நாடகாவில் ராஜினாமா செய்யும் அமைச்சர் நாகேந்திரா.. சித்தராமையா உத்தரவு
பெங்களூர்: கர்நாடகா காங்கிரஸ் அமைச்சரவையில் முதல் விக்கெட் விழ உள்ளது. வால்மீகி வளர்ச்சி ஆணை அதிகாரியின் தற்கொலை மற்றும் முறைகேடு புகாரில் அமைச்சர் நாகேந்திராவை முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய கூறியுள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சித்தராமையா முதல்வரானார். டிகே சிவக்குமார் துணை முதல்வரானார். சித்தராமையாவின் அமைச்சரவையில் நாகேந்திரா என்பவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதறை, பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த 26ம் தேதி கர்நாடகா மகரிஷி வால்மிகி பழங்குடியின வளர்ச்சி வாரியத்தின் அக்கவுண்ட் சூப்பிரண்டு சந்திரசேகரன் திடீரென்று தற்கொலை செய்தார். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
சந்திரசேகரன் எழுதிய கடிதத்தில், ‛‛கர்நாடகா மகரிஷி வால்மிகி பழங்குடியின வளர்ச்சி வாரியத்தின் ரூ.94.73 கோடியை இன்னொரு அக்கவுண்ட்டுக்கு மாற்ற வைத்தனர். நிர்வாக இயக்குனர் பத்மநாபா, அக்கவுண்ட் ஆபிசர் பரசுராம், துரகன்னாவர், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் முதன்மை மேலாளர் சுஷிமிதா ஆகியோர் பணத்தை மாற்ற கட்டாயப்படுத்தினர்'' என தெரிவித்தார். இதையடுத்து பத்மநாபா, பரசுராம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாஜக தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது இந்த முறைகேட்டில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திராவுக்கு தொடர்பு உள்ளது. அவரது உத்தரவின்பேரில் தான் இந்த முறைகேடு நடந்துள்ளது. தெலுங்கானா லோக்சபா தேர்தலுக்காக இந்த பணம் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது. நாகேந்திராவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இதனால் நாகேந்திராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நாகேந்திரா விவகாரம் தொடர்பாக நேற்று முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது நாகேந்திராவை ராஜினாமா செய்ய வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி சித்தராமையா, நாகேந்திராவிடம் கூறியுள்ளார். வழக்கில் நிரபராதியான பிறகு மீண்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்வதாகவும் சித்தராமையா உறுதியளித்துள்ளார்.
இதன்மூலம் விரைவில் நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதன்மூலம் முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் முதல் விக்கெட் விழ உள்ளது.












Click it and Unblock the Notifications