போலீஸ் வேனில் விடிய விடிய ரவுண்டு- என்கவுண்ட்டர் சதி..நீதி விசாரணை கோரும் 'அண்ணாமலை' நண்பர் சிடி ரவி
பெங்களூர்: கர்நாடகா மாநில போலீசார் தம்மை கைது செய்தது குறித்தும் தம்மை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல நடந்த சதி குறித்தும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில பாஜக எம்.எல்.சியும் தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளராக பணியாற்றியவருமான சி.டி. ரவி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் கர்நாடகா பெண் அமைச்சரை சிடி ரவி ஆபாசமாக பேசிய ஆடியோ- வீடியோ பதிவு இருப்பதால் நீதி விசாரணை தேவையே இல்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமேலவையில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை ஆபாசமான வார்த்தைகளில் விமர்சித்தார் பாஜக எம்.எல்.சி. சிடி ரவி. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், சட்டமேலவை தலைவரிடம் புகார் தெரிவித்தார். மேலும் லட்சுமி ஹெப்பால்கரின் ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு இடையே பெலகாவியில் குண்டு கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டார் சிடி ரவி.

பெலகாவியில் இருந்து பெங்களூருக்கு போலீசார் சிடி ரவியை அழைத்து வந்தனர். தற்போது இந்த வழக்கில் சிடி ரவி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஜாமீனில் விடுதலையான சிடி ரவிக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் தலையில் கட்டும் போட்டிருந்தார் சிடி ரவி.
இது தொடர்பாக சிடி ரவி கூறுகையில், போலீசார் இரவு முழுவதும் வேனிலேயே உட்கார வைத்து சுற்றிக் கொண்டிருந்தனர். என்னை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லவும் சதித் திட்டம் தீட்டி இருந்தனர். இதற்கு காரணம் துணை முதல்வர் டிகே சிவகுமார் என குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் இதனை துணை முதல்வர் டிகே சிவகுமார் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
ஆனாலும் தம்மை போலீசார் நடத்திய விதம் குறித்தும் தம்மை கொல்ல நடந்த சதி குறித்தும் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிறார் சிடி ரவி. இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, சிடி ரவி எப்படிப்பட்ட வார்த்தைகளால் விமர்சித்தார் என்பதற்கு வீடியோ- ஆடியோ ஆதாரம் இருக்கிறது. சிடி ரவி செய்தது குற்றச்செயல்தான். இதனால் நீதி விசாரணை எதுவும் தேவையே இல்லை; இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
கர்நாடகா பாஜக தலைவர்களில் ஒருவர்; தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பர் சிடி ரவி; தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளராகவும் இருந்தவர் சிடி ரவி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications