முடிச்சுவிட்டீங்க போங்க.. கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ பற்ற வைத்த நெருப்பு... கொதி கொதித்த டிகே சிவகுமார்
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரே, “இலவச திட்டங்களால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை.” என்று கூறியிருந்தார். அதனால் இலவச திட்டங்கள் நிறுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் துணை முதல்வர் சிவகுமார் இதுகுறித்து விளக்கியதுடன், எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராகவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் உள்ளனர். சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள மாநிலங்களில் கர்நாடகா மாநிலமும் ஒன்று. அங்கும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏராளமான பிரச்னைகள் நிலவி வருகின்றன. முதல்வர் சித்தராமையா முடா முறைகேடு வழக்கில் சிக்கினார். துணை முதல்வர் டிகே சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், 200 யூனிட் மின்சாரம் இலவசம், மகளிருக்கு மாதம் ரூ.2,000 பணம், ரேஷன் கடைகளில் 10 கிலோ இலவச பொருள்கள், வேலையில்லாத இளைஞர்களுக்க நிதி உள்ளிட்ட ஐந்து முக்கிய திட்டங்கள் இருந்தன.
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் காங்கிரஸ் அதை நிறைவேற்றவும் செய்தது. இந்த திட்டங்களை செயல்படுத்தியிருப்பதால், மக்களுக்கு தேவையான மற்ற அடிப்படை திட்டங்களை செயல்படுத்த முடிவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதை சொல்லியிருப்பது ஆளும் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ என்பதுதான் ஹைலைட்.
இதுகுறித்து விஜயாநகர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச் ஆர் கவியப்பா கூறுகையில், “தேர்தல் அறிவிப்புகளை செயல்படுத்தியிருப்பதால் அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு திட்டங்களால் மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது கூட சிரமமாக இருக்கிறது.
இதனால் மாநில முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறோம். இப்போதுள்ள ஐந்து திட்டங்களில் எதாவது இரண்டு திட்டங்களை நிறுத்தி வைத்துவிட்டு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.
முதல்வர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். நிதி உருவாக்கிக் கொடுக்க அவர் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அவரின் செயல்பாடுகளுக்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம்.” என்றார்.
இது கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளும் காங்கிரஸ் இலவச திட்டங்களை நிறுத்தப் போகிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால் மக்களும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், “அரசு அமல்படுத்தியுள்ள ஐந்து திட்டங்களும் வழக்கம் போல தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்து எம்எல்ஏ கவியாப்பாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். மக்களுக்கு சில வாக்குறுதிகளை கொடுத்து தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்.
எந்தக் காரணம் கொண்டும் அதில் இருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம். காங்கிரஸ் கட்சியின் எந்த எம்எல்ஏவும் இதுபோன்ற வாக்குறுதி திட்டங்கள் குறித்து விமர்சிக்க கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications