‛மெஜாரிட்டி’..கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்! பரிதாபத்தில் பாஜக.. எக்ஸிட் போல்ஸ் ரிசல்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. Election Forecast சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. மாலை 5 மணிநேர நிலவரப்படி மொத்தம் 65.69 சதவீத ஓட்டு பதிவானது.

இதையடுத்து பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தேர்தல் கருத்து கணிப்புகள் நடத்தும் அமைப்புகள் சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி Election Forecast சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த கருத்து கணிப்பின்படி 31 தொகுதிகள் உள்ள ஹைதராபாத்-கர்நாடகா மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி 20 தொகுதகளில் வெல்லும் எனவும், பாஜக 9 இடங்களிலும், ஜேடிஎஸ், மற்றவர் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை-கர்நாடகா மாவட்டங்களில் 50 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் வெல்லும். பாஜக 24 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஜேடிஎஸ், மற்றவர்களுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர கர்நாடகா மாவட்டங்களில் மொத்தம் 21 தொகுதிகள் உள்ளன. இது பாஜகவின் கோட்டையாகும். இங்கு பாஜகவுக்கு 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் உள்பட மற்றவர்களுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.அதேபோல் பழைய மைசூர் மாவட்டம் என்பது ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாகும். இங்கு காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளில், பாஜக 7 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி 20 தொகுதிகளிலும், மற்றவருக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கு ஜேடிஎஸ்ஸை விட காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் மத்திய கர்நாடகா மாவட்டங்களில் மொத்தம் 35 தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இறுதியாக பெங்களூர் மற்றும் பெங்களூர் புறநகர் மாவட்டங்களில் உள்ள 32 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளை வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மாறாக பாஜக 12 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும் மட்டுமே ஜெயிக்கும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பின் முடிவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 107 முதல் 121 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தனிமெஜாரிட்டி கிடைக்கும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை தட்டிப்பறிக்கும் என இந்த முடிவுகள் கூறுகின்றன.
அதேவேளையில் பாஜகவுக்கு 77 முதல் 91 தொகுதிகளில் வெற்றி கிடைக்கம் எனவும் ஜேடிஎஸ் கட்சி 20 முதல் 28 தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்கும் எனவும், மற்றவர்கள் பூஜ்ஜியம் முதல் 4 தொகுதிகளில் மட்டுமே வெல்வார்கள் என Election Forecast கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும், பாஜகவுக்கு கவலையளிக்கும் வகையிலும் உள்ளது.












Click it and Unblock the Notifications