சித்தராமையாவைத் தொடர்ந்து சிக்கலில் கார்கே! விமானவியல் பூங்காவில் மகனுக்கு சட்டவிரோத நில ஒதுக்கீடு!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் சட்டவிரோத நில ஒதுக்கீடு விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ராகுல் கார்கேவுக்கு விமானவியல் பூங்காவில் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ஆனால் கர்நாடகா அமைச்சர் எம்பி பட்டீல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் சித்தராமையாவுக்கு அடுத்தடுத்த நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வால்மீகி அறக்கட்டளை நிதி மோசடியைத் தொடர்ந்து சித்தராமையா மனைவி பார்வதிக்கு மைசூர் மேம்பாட்டு ஆணையம் சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி அளித்துள்ளார். இதற்கு எதிராக சித்தராமையா தொடர்ந்த வழக்கு நாளை மறுநாள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்தியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவும் சட்டவிரோத நில ஒதுக்கீடு விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ராகுல் கார்கேவுக்கு கர்நாடகா அரசின் விமானவியல் பூங்காவில் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது பாஜக, ஜேடிஎஸ் புகார். இதனால் கர்நாடகா அரசியலில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் எம்பி பட்டீல் கூறுகையில், ராகுல் கார்கேவின் சித்தார்த் விகார் கல்வி அறக்கட்டளைக்குதான் விமானவியல் பூங்காவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டத்துக்குட்பட்டுதான் இந்த நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. விமானவியல் பூங்காவில் ராகுல் கார்கே தரப்பில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ராகுல் கார்கே, ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனால்தான் ராகுல் கார்கேவுக்கும் நிலம் ஒதுக்கப்பட்டதே தவிர சிறப்பு சலுகை எதுவுமே வழங்கப்படவே இல்லை. முந்தைய பாஜக ஆட்சியில் சாணக்யா பல்கலைக் கழகத்துக்கு 116 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து அரசுக்கு ரூ137 கோடி இழப்பீடு ஏற்படுத்தினர். இது குறித்தும் பாஜகவினர் பேச வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications