பெங்களூர் 2வது விமானம் நிலையம் எங்கே அமைகிறது? டிகே சிவக்குமார் தந்த முக்கிய அப்டேட்
பெங்களூர்: தமிழ்நாட்டில் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைக்கு போட்டியாக கர்நாடகா அரசு 2வது சர்வதேச விமான நிலையத்தை பெங்களூரில் செயல்படுத்த துடித்து வருகிறது. இதற்கு மொத்தம் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானம் ஆணையம் ஆய்வு மேற்கொண்டு சில குறைகளை சுட்டிக்காட்டி உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூரில் 2வது விமான நிலையம் அமையும் இடம் குறித்து கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகா- தமிழ்நாடு எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. இதனால் அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்ககைளை தொடங்கி உள்ளது.

ஓசூரில் விமான நிலையம் அமைந்தால் அது பெங்களூரில் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். இதனால் இதனால் ஓசூர் விமான நிலையத்துக்கு போட்டியாக பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசும் திட்டமிட்டு வருகிறது.
பெங்களூரில் ஏற்கனவே கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இப்போது புதிதாக 2வது விமான நிலையம் அமைப்பதில் கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து கர்நாடகா அரசு 3 இடங்களை தேர்வு செய்தது. இந்த இடங்களை இந்திய விமான ஆணையத்தின் நிபுணர் குழு கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு செய்தது. இந்த அறிக்கையை கர்நாடகா அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைப்பது குறித்து கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் பேசி உள்ளார். இதுபற்றி அவர், ‛‛பெங்களூரில் 2வது விமானம் தெற்கு பெங்களூரில் அமைக்க ஆலோசனைமேற்கொண்டு வருகிறது'' என கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் மாநில அரசு பெங்களூர் விமான நிலையம் அமைக்க மொத்தம் 3 இடங்களை தேர்வு செய்தது. அதன்படி கனகபுரா ரோட்டில் ககலிபுரா அருகே ஒரு இடத்தையும், ஹாரோஹள்ளி அருகே இன்னொரு இடத்தையும், குனிகல் ரோட்டில் இன்னொரு இடத்தையும் தேர்வு செய்தது. இதனால் ககலிபுரா அல்லது ஹாரோஹள்ளியில் விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதில் ககலிபுராவில் 4,800 ஏக்கரும், ஹாரேஹள்ளியில் 5,000 ஏக்கரும், குனிகல் ரோட்டில் 5,200 ஏக்கரும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் விமான ஆணைய நிபுணர் குழுவினர் எந்த இடத்தையும் தேர்வு செய்யவில்லை. மாறாக ஒவ்வொரு இடத்திலும் உள்ள சவால்களை சுட்டிக்காட்டி மாநில அரசிடம் அறிக்கை வழங்கி உள்ளனர்.
குறிப்பாக கனகபுரா ரோட்டில் உள்ள ககலிபுரா, ஹாரோஹள்ளியில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மலைகளிலும், நெலமங்களாவில்வடகிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் மலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது விமான நிலையம் அமைக்க இது இடையூறாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில அரசு இந்த இடங்களில் உள்ள சவால்களை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது நம் நாட்டில் டெல்லி மற்றும் மும்பையில் மட்டுமே 2 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. பெங்களூரில் 2வது சர்வதேச விமான நிலையம் அனுமதிக்கப்படும் பட்சத்தில் டெல்லி, மும்பை வரிசையில் பெங்களூர் இணையும். பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை சுற்றி 150 கிலோமீட்டர் தூரத்தில்2033ம் ஆண்டுக்கு புதிய விமான நிலையம் அமைக்க தடை உள்ளது. தற்போது இந்த விமான நிலைய பணிகளை தொடங்கினால் 2033ல் முடிக்கலாம் என்ற அடிப்படையில் கர்நாடகா அனுமதி கோரி வருகிறது. மேலும், தொழில் வளர்ச்சி, பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 2வது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க கர்நாடகா முயற்சித்து வருகிறது.












Click it and Unblock the Notifications