கர்நாடகா முழுக்க டிச.24 முதல் "இரவு ஊரடங்கு.." வாகனங்கள் இயங்காது.. கடைகள் திறக்காது.. அரசு உத்தரவு
பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் நாளை டிசம்பர் 24ம் தேதி முதல், ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று கர்நாடக அரசு இன்று காலை அறிவித்த நிலையில், ஊரடங்கு நேரத்தை, இரவு 11 முதல் அதிகாலை 5 மணிவரை என்று, மாலையில் அரசு மாற்றியமைத்தது.
பால், காய்கறி, மருந்துகள், கொண்டு செல்லக்கூடிய வாகனங்களுக்கு எந்தவித கெடுபிடியும் கிடையாது. மருந்தகங்கள், மருத்துவமனைகள் போன்ற அவசரகால பணிகளில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் மட்டும் இரவிலும் திறந்து வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதோ பாவாடை தாவணியில் நிக்கிறது யார் தெரியுமா.. வாயை பிளக்க வைத்த பெங்களூர் மாப்பிள்ளை..!
எடியூரப்பா பேட்டி
பெங்களூரில் இன்று இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா நோய் பரவல் காரணமாக இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ஜனவரி 2ம் தேதி.. அதாவது சுமார் 9 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் இது பொருந்தும். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
பஸ், ரயில் சேவை
ஆனால் மாலையில், அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் டிசம்பர் 24ம் தேதி வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை ஜனவரி 2ம் தேதி வரை தினமும் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தேதியும், நேரமும் மாற்றம் செய்து தெரிவிக்கப்பட்டது. வேலைக்கு செல்வோர், வணிகர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஊரடங்கு நேரத்தை குறைத்துள்ளது அரசு. ஊரடங்கு காரணமாக, இரவு 11 மணிக்கு மேல் கர்நாடக அரசுப் பேருந்துகள், பெங்களூர் நகர பேருந்துகள், மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்டவையும் நிறுத்தப்படும். மக்கள் இரவு நேர பார்ட்டிகளில் பங்கேற்க முடியாது.
கர்நாடகாவில் குறைந்த கொரோனா
கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தைவிடவும் குறைந்துள்ளது. அதிக நோய் பரவல் இருந்த பெங்களூரிலும் ஒரு நாளைக்கு 600க்கும் கீழேதான் கொரோனா கேஸ் பதிவாகிறது. கடந்த சில வாரங்களாகவே பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் பரவிய புதுவகை கொரோனா பிரச்சினையால், முன்னெச்சரிக்கையாக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழக அரசு
இதேபோன்ற நடவடிக்கையை தமிழக அரசும் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தடுப்பூசி அமலுக்கு வரும்வரை முன்னெச்சரிக்கை அவசியம் என்பதே இதற்கு காரணம். எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ வல்லுநர்களுடன் நடத்த உள்ள ஆய்வின்போது இந்த முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே, மும்பையில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கிற்கு எதிர்ப்பு
அதேநேரம், சுற்றுலா, ஹோட்டல், ரெஸ்டாரண்ட் துறையில் உள்ளவர்கள், கர்நாடக அரசின் இரவு நேர ஊரடங்கு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் இரவு நேரத்தில்தான் வணிகம் நன்கு இருக்கும் என்றும், அது பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.