மகளிருக்கு மாதம் ரூ.2000.. ஆகஸ்ட் 15ல் கர்நாடகாவில் அமல்.. கண்டிஷன் உண்டா? இல்லையா? முழுவிபரம்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவித்த மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கான ரூ.2 ஆயிரம் திட்டம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான கண்டிஷன் உண்டா? இல்லையா? என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முக்கிய 5 வாக்குறுதிகளை அறிவித்தது. அதன்படி க்ருஹ லட்சுமி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் வழங்கப்படும் என கூறியது.

மேலும் அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரசி இலவசம். சக்தி திட்டத்தின் கீழ் கர்நாடகா அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்படும். யுவநிதி திட்டத்தில் டிகிரி முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.2000, டிப்ளமோ முடித்து வேலையில்லாதவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என்ற 5 அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்ற பெற்றது. சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து 5 தேர்தல் வாக்குறுதிகளையும் செயல்படுத்த காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஆலோசித்து வந்தது. அதன்படி இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 5 திட்டங்களையும் அமல்படுத்த அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்த குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.2000 வழங்கும் திட்டம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அதன்படி ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000 அரசு சார்பில் செலுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டியது அவசியமானதாக உள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை விண்ணப்பங்கள் செய்ய வேண்டும். இந்த காலக்கட்டத்தில் அதற்கான பணிகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். அதன்பிறகு ஆகஸ்ட் 15க்குள் இறுதி செய்யப்பட்டு அன்றைய தினம் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
ஏபிஎல் மற்றும் பிபிஎல் வகை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை பெறுவோர் அதாவது முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரசு சார்பில் உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் கூட அவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் ரூ.2000 மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகா குடும்ப தலைவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications