முத்து படத்தில் வருமே அரண்மனை.. ப்ளடி பெக்கர் வீடு.. தனியார் வசமாகிறது மைசூர் லலிதா மஹால்
பெங்களூர்: மைசூரிலுள்ள பிரபலமான லலிதா மஹால் அரண்மனையின் நிர்வாகத்தை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றும் முடிவை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு, அரண்மனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அதன் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
1921-ம் ஆண்டு, மகாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் கட்டப்பட்ட இந்த கட்டிடம், பிரிட்டிஷ் வைஸ்ராய் தங்குவதற்காக அமைக்கப்பட்டது. லண்டனின், செயிண்ட் பால்ஸ் கதீட்ரலைப் போன்ற கட்டிடக்கலை அமைப்பு கொண்ட இந்த அரண்மனை, மைசூர் ராஜாங்க பாரம்பரியத்தின் ஒரு முக்கிய சின்னமாகத் திகழ்கிறது. மைசூருக்கு சுற்றுலா செல்வோர் கண்டுகளிக்கும் முக்கிய இடமாகும் இது. இதன் பிரமாண்டம் மெய் சிலிர்க்க வைக்க கூடியது. எனவேதான், ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமார் போன்ற திரைக் கலைஞர்களுக்கு லலிலா மஹால் ரொம்ப பிடித்த பகுதியாக மாறிப்போனது. இங்கு சூட்டிங் செய்தால் படம் ஹிட் என்ற சென்டிமென்ட் அவர்களுக்கு உண்டு.

இங்கு சூட்டிங் செய்யப்பட்ட படங்களில் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம் நிச்சயம் மறக்க முடியாத ஒன்று. இந்தப் படத்தில் காட்சியளித்த பிரமாண்டமான அரண்மனை, படம் பார்த்த அனைவர் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். இந்திய சினிமாவையே அதிர வைத்த KGF திரைப்படத்தில் ராக்கி பாய் வாழ்ந்த அரண்மனையாகவும் லலிதா மஹால் தான் காட்டப்பட்டது. கார்த்திக் நக்மா நடித்த 'மேட்டுக்குடி', விஜய் சிம்ரன் நடித்த 'பிரியமானவளே', 'மதராசப்பட்டினம்', 'காதலன்', 'ஜோடி', 'பையா' உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் இந்த அழகான அரண்மனையை நாம் பார்த்திருப்போம். சமீபத்தில் வெளியான ப்ளடி பெக்கர் திரைப்படத்தில் காட்டப்படும் பிரமாண்ட வீடும் இதுதான்.
ஏன் தனியார்மயமாக்கல்?
தற்போது அரசு நிறுவனமான ஜங்கிள் லாட்ஜஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (JLR) மூலம் நிர்வகிக்கப்படும் இந்த அரண்மனையின் பராமரிப்புக்கு கணிசமான நிதி தேவைப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. பழுதுபார்ப்பு, நவீனமயமாக்கல் போன்ற பணிகளுக்கு ₹ 40-50 கோடி அல்லது அதற்கு மேல் தேவைப்படும் என கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே. தெரிவித்துள்ளார்.
கன்னட கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம்
இதேவேளை, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மைசூர் மாவட்ட ஆணையாளர் அலுவலகத்தில் கன்னட மியூசியம் அமைக்க திட்டமிட்டுள்ளார். மேலும், மாநிலத்தில் தயாரிக்கப்படும் பொருட்களில் கன்னட மொழி லேபிள்களை செயல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது.
லலிதா மஹால் அரண்மனையின் தனியார்மயமாக்கல் மற்றும் கன்னட கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசின் முடிவுகள், மாநிலத்தின் பாரம்பரியத்தை பாதுகாத்து, அதே நேரத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications