நீட் தேர்வையே ரத்து செய்யுங்க-மாநில அரசுகளே தேர்வு நடத்தட்டும்.. தமிழ்நாட்டுடன் கை கோர்த்த கர்நாடகா!
பெங்களூர்: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறையையே மத்திய பாஜக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகா அரசும் வலியுறுத்தி உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் தொடருகின்றன. நீட் நுழைவுத் தேர்வால் மாநில பாடங்களில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு பாழாகிறது. இதனால் தமிழ்நாட்டில் அனிதா உள்ளிட்ட பல மாணவச் செல்வங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டனர். இந்தப் பேரவலம் இன்னமும் தொடருகிறது. இதனால்தான் தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு தரக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இன்னொரு பக்கம் நீட் நுழைவுத் தேர்வில் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு முறைகேடுகள் கொடி கட்டிப் பறக்கின்றன. இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மட்டும்தான் நீட் தேர்வு முறைக்கு எதிராகப் போராடி வந்தது. தற்போது பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வு முறை, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து உக்கிரமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வட இந்திய மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியிருந்தார். தற்போது தமிழ்நாட்டைப் போலவே நீட் நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் வலியுறுத்தி உள்ளார். மேலும் நீட் நுழைவுத் தேர்வு முறையை கைவிட்டுவிட வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் டிகே சிவகுமார் வலியுறுத்தி இருக்கிறார்.
நீட் தேர்வு முறைகேடுகளால் பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. ஆகையால்தான் நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்கிறோம் என்றும் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications