மீண்டும் அடம் பிடிக்கும் கர்நாடகா.. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை
பெங்களூர்: காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடகாவுக்கு இதை ஏற்கவும் மனம் வரவில்லை. மாறாக மேலாண்மை ஆணையத்திடம் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளது.
காவிரி பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை உரிய முறையில் வழங்க கர்நாடகா மறுத்து வருகிறது. காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 24,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது.

இதனால் தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பகிர்வு மோதல் மீண்டும் உச்சம் எடுத்துள்ளது. டெல்லியில் நேற்று முன் தினம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இதில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வரும் 16-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. ஆனால், இதற்கும் கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மண்டியா டவுனில் கர்நாடக மாநில விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் பெங்களூர் - மைசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தான் இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை, கேரளா மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து வரும் 16-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடகா கோரியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் இந்த தகவலை தெரிவித்தார்.
3 ஆயிரம் கன அடி நீர் திறப்புக்கான உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக ஆணையத்திலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்கவும் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக குழு கோரிக்கை விடுத்துள்ளதாம். தற்போது இருக்கக் கூடிய நீரின் அளவு மிக குறைவாக உள்ளது.
முக்கியமாக மழை இல்லாததன் காரணமாக மூன்று முக்கிய நீர் நிலைகளில் நீர்வரத்து மிக மிக குறைவாக உள்ளது. அதையும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு குடிநீர் தேவைக்காக பயன்படுத்துகிறோம். எனவே மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக மேலாண்மை ஆணையம் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications