பெங்களூர் மக்களுக்கு இன்ப செய்தி.. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.. டிகே சிவக்குமார் அதிரடி உத்தரவு
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள பூங்காக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே இயங்கி வந்த நிலையில், இது தொடர்பாக அம்மாநில அரசு மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூர் நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகும். நாட்டின் ஐடி தலைநகராகக் கருதப்படும் பெங்களூரில் பல லட்சம் பேர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பெங்களூர் நகரில் சுமார் 1,200 பூங்காக்கள் உள்ளன.. அவை இப்போது காலை 5 மணி முதல் 8 மணி வரையும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 8 மணி வரையும் திறந்து இருக்கும்.
பெங்களூர் பூங்காக்கள்: பெங்களூர்வாசிகள் காலை மற்றும் மாலையில் இங்கு தான் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். மேலும், குழந்தைகளுடன் வெளியே செல்ல விரும்புவோரும் இதுபோன்ற பூங்காக்களுக்கு வரவே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் பெங்களூர் பூங்காக்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
இதனால் இந்த பூங்காக்களை நாள் முழுக்க திறந்து வைக்க வேண்டும் என்றும் அப்படித் திறந்து இருந்தால் அவை பெரியளவில் பயனுள்ளதாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.. இருப்பினும், இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகப் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.
சிவக்குமார் உத்தரவு: இதற்கிடையே இது தொடர்பாகக் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நேற்று ஜூன் 12 முதல் பெங்களூரில் இருக்கும் எல்லா பூங்காக்களும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் எனக் கர்நாடக துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் பெங்களூரில் முக்கிய சுற்றுலாத் தலமாக இருக்கும் கப்பன் பார்க் மற்றும் லால்பாக் மட்டும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், பூங்கா திறந்து இருக்கும் நேரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் குறிப்பிட்ட இடைவெளியில் ரோந்து பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பெங்களூரில் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்லவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது என்றும் டிகே சிவக்குமார் தெரிவித்தார்.
வரவேற்பு: கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இந்தியாவின் ஐடி தலைநகராக இருக்கும் பெங்களூரில் ஐடி ஊழியர்கள் மற்றும் அதைச் சார்ந்து பல லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலும் ஐடி நிறுவனங்களுக்கு ஷிப்ட் அடிப்படையிலேயே வேலை இருக்கும். இதனால் காலை முதல் இரவு வரை பூங்காக்கள் திறந்து இருக்கும் உத்தரவு இவர்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம் நாள் முழுக்க பூங்காக்கள் திறந்து இருக்கும் போது மக்கள் வருகை அதிகரிக்கும். இதனால் பாதுகாப்பு, குப்பைகள் குவிவது உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும். இதை உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த இரண்டிலும் உரிய நடவடிக்கை எடுத்தால் அது பெரியளவில் உதவியாக இருக்கும் எனப் பெங்களூர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications