தமிழ்நாடு எதிர்ப்பா.. டோண்ட் கேர்! மேகதாது அணையில் வேகம் காட்டும் கர்நாடகா - 60 நாளில் ஆய்வுப்பணிகள்
பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சியில் இறங்கி இருக்கும் கர்நாடக அரசு, 60 நாட்களுள் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களின் ஜீவ நதியாக விளங்கும் காவிரி கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு பாய்கிறது. கர்நாடகாவில் தோன்றினாலும் காவிரி ஆற்றின் பெரும்பான்மையான தூரம் தமிழ்நாட்டுக்குள் வருகிறது. தருமபுரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் என பல மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கான நீராகவும் காவிரி இருக்கிறது.

ஆனால், கர்நாடகா பல்வேறு வழிகளில் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரை தடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்பட்ட மோதல் போக்கு தற்போது மேகதாது அணையில் வந்து நிற்கிறது.
கர்நாடகவின் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள மேகேதாது என்ற பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடக அரசு முடிவெடுத்தது. காங்கிரஸ், பாஜக என அடுத்தடுத்து ஆட்சிகள் மாறினாலும் மேகதாது அணை விவகாரத்தில் 2 அரசுகளுமே உறுதியாக உள்ளன.
காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9,000 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட திட்டத்தின் வரைவு அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்தது. மத்திய நீர்வளத்துறையிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்குமாறு கர்நாடக அரசு அனுமதி கோரி இருக்கிறது.
தமிழ்நாடு அரசும், விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசோ, மத்திய அரசிடமும் உச்சநீதிமன்றத்திலும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் தரக்கூடாது என முறையிட்டு இருக்கிறது.
மேலும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசின் மேகதாது அணைக் கட்டும் திட்டம் குறித்து விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஆனால், கர்நாடக அரசோ இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது மேகேதாதுவில் அணை கட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்து இருக்கிறது.
இதுகுறித்து தெரிவித்து உள்ள கர்நாடக வனத்துறை அதிகாரி மாலதி பிரியா, "மேகதாது அணை கர்நாடகாவின் ராம்நகர் மற்றும் சாம்ராஜ்நகர் வனப்பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. எனவே இங்கு இருக்கும் மரங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்படும். காவிரி, பிலிகிரி ரங்கனதிட்டு, பந்திப்பூர், மலை மாதேஸ்வரா வன சரணாலயங்களை சேர்ந்த 29 வனத்துறை ஊழியர்களிடம் மரங்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்க உத்தரவிட்டு இருக்கிறோம்.
அத்துடன் இந்த வனப்பகுதிகளில் உள்ள பயிர்கள், உயிர்கள் குறித்த ஆய்வுகளையும் இந்த வனத்துறை ஊழியர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர். இது தவிர நில அளவீடு பணிகளும் தொடங்கப்படும். 60 நாட்களுக்குள் இந்த ஆய்வுப் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம். வானிலை சீராக இருந்தால் காலதாமதம் இன்றி இந்த நாட்களுக்குள் அப்பகுதியில் மரங்கள், உயிரினங்களின் கணக்கெடுப்பை முடிக்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications