'கடத்திய' எடியூரப்பா உதவியாளர்.. போனில் 'கதறிய' சுயேச்சை எம்எல்ஏ.. ஏர்போர்ட்டுக்கு ஓடிய அமைச்சர்
பெங்களூர்: கர்நாடக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த, சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ், எடியூரப்பாவின் உதவியாளரால் கடத்தி செல்லப்பட்டதாக திடுக்கிட வைக்கும், குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அம்மாநில அமைச்சர் டி.கே.சிவகுமார்.
கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்து அமைச்சரானவர் சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ். ஆனால், திடீரென இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ராஜ்பவனுக்கு சென்று ஆளுநரிடம் கடிதம் அளித்தார்.
மேலும் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மற்றொரு கடிதத்தையும் ஆளுநரிடம் அவர் சமர்ப்பித்தார். இதன் பிறகு பெங்களூரில் உள்ள ஹெச்ஏஎல் என்ற பகுதியில் உள்ள ஏர்போர்ட்டில் இருந்து தனியார் விமானத்தின் மூலம் மும்பைக்கு பறந்தார்.
அப்போது எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷ் என்பவர் அவருடன் இருந்தது, புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிய வந்தது.
கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக.. ஏர்போர்ட்டில் சிக்கிய 'அந்த' போட்டோ!
இந்த நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி கே சிவகுமார், தன்னை எடியூரப்பாவின் உதவியாளர் கடத்திச் செல்வதாக நாகேஷ் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். இதை அறிந்ததும் நான் பதறி அடித்து ஏர்போர்ட்டுக்கு ஓடினேன். ஆனால், அதற்குள்ளாக விமானம் கிளம்பி விட்டது என்று தெரிவித்தார்.
பார்ப்பதற்கு இது பகீர் குற்றச்சாட்டு போல இருந்தாலும், நாகேஷ் நடவடிக்கையை வைத்து பார்ப்போருக்கு அவர் கடத்தப்படவில்லை என்பது உறுதியாகத் தெரியும். ஆளுநர் மாளிகைக்கு அவராகத்தான் சென்று ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டுச் சென்றார். ஆனால், அவரை கேலி செய்யும் விதமாக சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பாஜக தான் இந்த ஆபரேஷன் தாமரையின் பின்னால் இருக்கும் கட்சி என்பதை வெளிக்காட்டுவதற்காக, கிண்டலாக சிவகுமார் இவ்வாறு கூறியதாக தெரிகிறது.