மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு எதிராகக் கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
பெங்களூரு: மேகதாது விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசு முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி செலவில் இந்த அணையைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடக அரசு தயாரித்து, மத்திய ஜல்சக்தி துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற அனுப்பி வைத்துள்ளன.

மேகதாது விவகாரம்
இருப்பினும், மேகதாதுவில் காவிரிக்குக் குறுக்கே அணைக் கட்டினால் அது பேரபாயத்தை ஏற்படுத்தும் என்பதாலும் தமிழ்நாட்டில் உள்ள பல லட்சம் விவசாயிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும் இத்திட்டத்திற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசும் இதுவரை மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேகதாது விவகாரத்தில் இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடகா
இதற்கிடையே சமீபத்தில் கர்நாடகாவில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மேகதாது அணைக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்காத நிலையில், பட்ஜெட்டில் அணைக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்குத் தமிழக அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாகத் தமிழக சட்டசபையில் திங்கட்கிழமை தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ்
கர்நாடகாவில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், இந்த விவகாரம் அங்கும் எதிரொலித்தது. பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் எச்.கே.பட்டீல், தமிழக அரசு சட்டசபையில் மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்திருப்பது குறித்துப் பேசினார். தமிழக அரசு சட்டசபையில் மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளாகவும் கர்நாடக அரசின் திட்டத்திற்குத் தமிழக அரசு குறுக்கீடாக நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர்கள்
இது தொடர்பான விவாதத்தில் பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன தீர்மானம் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டனர். இறுதியில் இந்த விவாதத்திற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்துப் பேசும்போது மேகதாது திட்டத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது என்றும் மேகதாதுவில் அணையைக் கட்டியே தீருவோம். இதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தீர்மானம்
மேலும், டெல்லிக்கு அனைத்துக்கட்சி குழுவை அழைத்துச் செல்ல ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,பெங்களூருவில் கன்னடர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி பேசும் மக்களும் உள்ளனர் என்றும் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டி இருக்கிறது என்றும் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இந்நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு எதிராகக் கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.












Click it and Unblock the Notifications