கர்நாடகா அமைச்சரும் ராஜினாமா! கவிழும் நிலையில் குமாரசாமி அரசு
Recommended Video
பெங்களூர்: கர்நாடக கூட்டணி ஆட்சிக்கு, நெருக்கடி அளிக்கும் வகையில் 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது அமைச்சர் ஒருவரே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், ஆட்சியை கலைப்பதற்காக, கூட்டணியில் உள்ள இரு கட்சிகளை சேர்ந்த சில எம்எல்ஏக்களையும், பாஜக விலைக்கு வாங்க முயற்சி செய்து வந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 14ஆம் தேதி அமைச்சரவையை விரிவுபடுத்தினார் குமாரசாமி .அப்போது கோலார் மாவட்டம் முல்பாகல், தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் மற்றும் பிரங்யாவந்தர ஜனதா கட்சி என்ற சிறு கட்சியிலிருந்து தேர்வான எம்எல்ஏ சங்கர் ஆகியோருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார் குமாரசாமி.
ஏற்கனவே கூட்டணி ஆட்சி காரணமாக, காங்கிரசில் பலருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தி இருந்த நிலையில், சுயேச்சை மற்றும் வேறு கட்சியை சேர்ந்தவரை கூப்பிட்டு அமைச்சர் பதவியை குமாரசாமி கொடுத்ததால் கொந்தளித்தனர் காங்கிரஸ் சீனியர் எம்எல்ஏக்கள்.

இதேபோன்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியிலும் அதிருப்தி எழுந்தது. இந்த நிலையில்தான் பாஜக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது. அடுத்தடுத்து 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து சட்டசபை சபாநாயகரின் செயலாளரிடம் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். ஆளுநரிடமும் இதேபோன்ற கடிதத்தை கொடுத்துள்ளனர். இதில் 10 பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள்.

ஆட்சியை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்றுதான் குமாரசாமி வேறு கட்சிக்காரருக்கும், சுயேச்சைக்கும் அமைச்சர் பதவி கொடுத்தார். ஆனால், அதற்கும் வேட்டு வைத்துவிட்டது பாஜக. தனது அமைச்சர் பதவியை இன்று, ராஜினாமா செய்துவிட்டு மும்பை கிளம்ப ஆயத்தம் ஆகி விட்டார் நாகேஷ். அவரும் பாஜகவுக்கு ஆதரவு அளித்து, புதிதாக அமையவுள்ள ஆட்சியில் அமைச்சர் பதவியை பெறலாம் என்று திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது குமாரசாமி அரசு.












Click it and Unblock the Notifications