இடஒதுக்கீடு: எடியூரப்பா ஆட்சிக்கு மீண்டும் ஆபத்து... எஸ்.டி. எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா மிரட்டல்
பெங்களூரு: இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து கட்சி எஸ்.டி. எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பழங்குடி மக்களுக்கான (எஸ்.டி) இடஒதுக்கீட்டை 3%-ல் இருந்து 7.5% ஆக உயர்த்த வேண்டும்; தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி) இடஒதுக்கீட்டை 15%-ல் இருந்து 17.5% ஆக அதிகரிக்க வேண்டும் என்பது கோரிக்கை. இக்கோரிக்கைகள் குறித்து ஆராய முந்தைய ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசு, நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் கமிஷன் அமைத்தது.

இக்கமிஷன் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போதைய எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு இந்த கமிஷனின் பணிகாலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்திருக்கிறது.
இது இடஒதுக்கீட்டை கோரும் எஸ்சி, எஸ்டி சமூகங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.டி. எம்.எல். ஏ.க்கள் அனைவரும் ஶ்ரீராமுலு தலைமையில் அணி திரண்டுள்ளனர்.
இவர்கள், நாகமோகன் தாஸ் கமிஷன் அறிக்கையை ஜனவரி 15-க்குள் தாக்கல் செய்து அரசு முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒட்டுமொத்தமாக எஸ்.டி. எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டசபையில் 15 எஸ்.டி.எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் 9 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்.
பாஜகவின் 9 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தால் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை இழக்க நேரிடும். இதனால் எடியூரப்பா அரசுக்கு புது நெருக்கடி உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications