அதிருப்தி எம்எல்ஏக்கள் நாளை காலைக்குள் நேரில் ஆஜராக வேண்டும்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்
பெங்களூர்: ஆளும் காங்கிரஸ்-ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சிகளை சேர்ந்த, 15 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு அந்த கட்சிகளின் தலைமை சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களை நாளை காலை 11 மணிக்குள் நேரில் ஆஜராக சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரசில் இருந்து 13 பேரும், மஜதவின் 3 பேரும் - இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜினாமா செய்ததை அடுத்து கர்நாடக அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அதில் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏவுமான ராமலிங்க ரெட்டி மட்டும், தனது முடிவை வாபஸ் பெற்றுக்கொண்டு, சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில், முதல்வர் குமாரசாமி கடந்த வாரம் வியாழக்கிழமை தீர்மானம் கொண்டுவந்தார். இதுவரை அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து 15 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி முறையே, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி தலைமை சார்பில் சபாநாயகருக்கு மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மீது பதில் அளிக்க நாளை காலை 11 மணிக்குள் தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று சபாநாயகர் 15 அதிருப்தியாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இன்று அறிவித்தார்.
ஒருவேளை அவர்கள் ஆஜராகாவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதால் பரபரப்பு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications