தம்பி வைஷ்ணவ்! இது சாகும் வயதா? அதிலும் மாரடைப்பால் சிறுவன் துடித்து இறந்த கொடுமை!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவில் உள்ள வேணுகல்லுகுடா கிராமத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அரங்கேறிய அந்த சோகம் ஒட்டுமொத்தப் பகுதியையுமே உலுக்கியெடுத்துள்ளது. வெறும் நான்கு வயதே ஆன வைஷ்ணவ் என்ற மழலை, மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில் பரிதாபமாக உயிரிழந்தான்.
பாஜகவின் ஹிரியூர் தாலுகா தலைவரான கே.அபிநந்தனின் மகன்தான் இந்த குட்டிப் பையன் வைஷ்ணவ். நள்ளிரவில் திடீரென அந்தப் பிஞ்சு குழந்தை கடுமையான நெஞ்சு வலியால் துடித்திருக்கிறான். அலறியடித்து எழுந்த பெற்றோர், அது ஏதோ சாதாரண கேஸ்டிரிக் பிரச்சினை (வயிற்று உபாதை) என்று நினைத்து, வீட்டில் இருந்த சில மருந்துகளைக் கொடுத்து அவசர அவசரமாக முதலுதவி செய்துள்ளனர்.

ஆனால், வலி குறைந்தபாடில்லை. குழந்தை வலியால் துடிப்பது நாளுக்கு நாள்... இல்லை, நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்க, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பெற்றோர், உடனே அவனை ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்து காரில் சென்றனர். ஆனால், மருத்துவமனையின் வாசலை மிதிப்பதற்கு முன்பாகவே, அந்தப் பிஞ்சு உயிர் காற்றில் கலந்துவிட்டது. வழியிலேயே அவனது மூச்சு நின்றுபோனது.
இச்சம்பவம் குறித்துப் பேசிய மருத்துவர் ஒருவர், "பிரேதப் பரிசோதனை முடிவுகள் வராமல், அந்தச் சிறுவன் மாரடைப்பால்தான் இறந்தான் என்பதை எங்களால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியாது. உயிரிழந்தபோது அவனது உடல் நீல நிறமாக மாறியிருந்தது. எனவே, வேறு ஏதேனும் தீவிரமான உடல்நலக் குறைபாடு அல்லது நோய் காரணமாகவும் இந்த மரணம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது," என்று தெரிவித்தார்.
விளையாடித் திரிய வேண்டிய வயதில், துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த தங்களின் செல்லப் பிள்ளை இப்படி சடலமாக மீண்டதை ஏற்கும் சக்தியில்லாமல் அவனது பெற்றோரும், குடும்பத்தினரும் கதறித் துடிப்பது பார்ப்பவர் நெஞ்சங்களை ரணமாக்கியுள்ளது. வைஷ்ணவின் வீடு இப்போது ஒட்டுமொத்தமாக சோகக் கடலில் மூழ்கிக் கிடக்கிறது.
குழந்தையின் இறப்பால் அந்த பகுதியினர் நிலைகுலைந்து போயுள்ளனர். எப்போதும் எல்லாரிடமும் அன்பாக பழகக் கூடிய அந்த சின்னஞ்சிறு குழந்தை இன்று உயிருடன் இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது என்கிறார்கள்.
இத்தகு நிகழ்வுகள் நமக்கு ஒரு முக்கிய பாடத்தை உணர்த்துகின்றன. சிறு குழந்தைகள் நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் என்று கூறும்போது, அதை நாமாகவே 'கேஸ் ட்ரபிள்' என்று அலட்சியமாக நினைத்து சுய மருத்துவம் (Self-medication) செய்வதைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக தகுதியான மருத்துவர்களின் ஆலோசனைக்கு அழைத்துச் செல்வதே இதுபோன்ற பேரிழப்புகளைத் தடுக்கும் ஒரே வழி.
பொதுவாக கேஸ்ட்ரிக் பிரச்சினையால் வலி என்றால் வலது புறம் நெஞ்சு பகுதியிலும் அப்படியே பின்புறம் உள்ள முதுகு பகுதியிலும்தான் வலிக்கும் என சொல்வார்கள். இடது பக்கம் யாரேனும் வலி என சொன்னால் கேஸ்டிரிக் டிரபிள் என நினைத்து யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம் என்பதுதான் அனைவரின் அறிவுரையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications