கர்நாடகாவில் ஓட்டு திருட்டு.. 100 செல்போன் எண்களை ட்ரேஸ் செய்த போலீசுக்கு ஷாக்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலிலிருந்து முறைகேடாக வாக்காளர் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த பெயர் நீக்க விண்ணப்பத்திற்கு பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் போலியான முகவரியின் அடிப்படையில் பெறப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் பலமாக உள்ள தொகுதிகளில் வாக்கு திருட்டுக்கள் நடைபெறுவதாக ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் சுமார் 6,018 வாக்காளரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், இது ஏதோ தொழில்நுட்ப தவறால் நடந்தது கிடையாது, திட்டமிட்டு குறிப்பிட்ட கும்பலால் இந்த பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கிறது எனவும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். கடந்த 2023ம் ஆண்டு இந்த பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக ஆதாரங்களையும் முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக சிஐடி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணையில், வாக்காளர் பெயர்களை நீக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும், இதற்காக 100 செல்போன் எண்கள் பயன்படுத்தப்பட்டன எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த 100 எண்களும் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பெறப்பட்டவை. இந்த எண்களிலிருந்து பெயர் நீக்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக செல்போன் எண் பெற வேண்டும் எனில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை கட்டாயம் வேண்டும். இந்த 100 சிம்கார்டுகளும் இப்படி அடையாள அட்டை கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த அடையாள அட்டைகள் அனைத்தும் போலியானவை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக புலனாய்வு போலீசார் சில தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை.
எனவே தேர்தல் ஆணையம் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை மேற்கொண்டிருந்தது. இதில் பல லட்சம் வாக்காளர்கள் வேண்டுமென்றே விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது, ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலை கணக்கில் கொள்ளாமல், புதிதாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சரிபார்த்து அதன் பின்னர் உருவாக்கப்படும் பட்டியலாகும். விரைவில் நாடு முழுவதும் இந்த வாக்காளர் பட்டியலை தயாரிக்க தேர்தல் அலுவலர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இப்படி இருக்கையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக சிஐடி போலீசார் சில தகவல்களை வெளியிட்டு இருப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அதிகரிக்க செய்துள்ளது.












Click it and Unblock the Notifications