மேகதாது.. மத்திய அரசின் அனுமதியை வாங்கி விட்டு.. தமிழகத்தை பேச்சுக்கு அழைக்கும் கர்நாடகா!
பெங்களூர்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரிக்கு குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்காக, முதற்கட்ட ஆய்வு பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்குதான் பலன் கிடைக்கும். தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். நீர் தட்டுப்பாடு ஏற்படும்போது இந்த தண்ணீரை தமிழகம் பகிர்ந்துகொள்ள முடியும்.
மேகதாது அணையில் இருந்து கர்நாடக அரசு விவசாயத்திற்காக தண்ணீர் எடுக்கப்போவது கிடையாது. எனவே எதற்காக தமிழகம் இந்த திட்டத்தை எதிர்க்கிறது என்று தெரியவில்லை. நாங்கள் இது தொடர்பாக தமிழகத்துடன், சண்டை போடுவதற்கு விரும்பவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக உள்ளோம்.
இது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்டுள்ளோம். எப்போது அழைத்தாலும் தமிழகம் சென்று பேச தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.