கர்நாடகா துங்கபத்ரா அணை மதகு உடைந்தது- 2 லட்சம் கன அடிநீர் வெளியேற்றம்! 3 மாநிலங்களில் எச்சரிக்கை!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் துங்கபத்ரா அணையின் 19-வது மதகு உடைந்ததால் வினாடிக்கு 2 லட்சம் கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. துங்கபத்ரா அணையில் இருந்து 60 டிஎம்சி நீர் வெளியேற்றப்பட்டால்தான் மதகு சரிபார்க்கப்படும் என்பதால் அணையில் இருந்து கூடுதலாக நீர் வெளியேற்றப்பட இருக்கிறது. இதனால் கர்நாடகாவின் 4 மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் துங்கபத்ரா நதி சீறிப் பாய்ந்தோடும் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 2-வது மாதமாக தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் கொட்டித் தீர்க்கிறது. கர்நாடகா மாநிலத்தின் அத்தனை பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஆறுகள் சீறிப்பாய்ந்து அணைகள் நிரம்பி வழிகின்றன.

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணையும் நிரம்பியது. இதனால் துங்கபத்ரா அணையில் இருந்து நீர்வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் வெளியேற்றப்பட்ட போது அணையின் 19-வது மதகு உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மதகு பகுதியில் இருந்து மட்டும் வினாடிக்கு 33,000 கன அடிநீர் வெளியேறியது.
துங்கபத்ரா அணையின் மொத்த கொள்ளளவு 105 டிஎம்சி நீர். தற்போது அடித்துச் செல்லப்பட்ட மதகை சரி செய்ய குறைந்தது 60 டிஎம்சி நீர் அளவு இருந்தால்தான் சாத்தியமாகும். இதனால் துங்கபத்ரா அணையில் இருந்து கூடுதலாக நீர் திறந்துவிடப்படுகிறது. தற்போதைய நிலையில் துங்கபத்ரா அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
துங்கபத்ரா அணையில் இருந்து பெருமளவு நீர் வெளியேற்றப்படுவதால் கொப்பல், ராய்ச்சூர், பெல்லாரி, விஜயநகர் ஆகிய கர்நாடகாவின் துங்கபத்ரா கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விஜயநகர் மாவட்டத்தின் ஹம்பி பகுதியில் வரலாற்று சின்னங்களை துங்கபத்ரா நதி வெள்ளம் மூழ்கடித்துள்ளது.
அத்துடன் துங்கபத்ரா நதியானது ஆந்திரா, தெலுங்கானாவில் சீறிப் பாய்கிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் துங்கபத்ரா நதி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மதகு உடைந்த துங்கபத்ரா அணையை கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். துங்கபத்ரா அணை மதகை சரி செய்ய ஒரு வார காலமாகும் என்கின்றனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications