ஷாக்.. பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கும் களியக்காவிளை SSI கொலை கும்பலுக்கும் தொடர்பு!
பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் குமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைதானவர்களுக்கும் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய கும்பலுக்கும் தொடர்பு உள்ளது தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள புரூக்ஃபீல்டில் அமைந்துள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ஆம் தேதி பட்டப்பகலில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. தீவிரவாதிகளின் செயலா? வெளிநாட்டு சதியா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

முதலில் பெங்களூர் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கினர். ஆனால், பின்னர் என்ஐஏ வசம் விசாரணை சென்றது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட அப்துல் மதீன் அகமது தாஹா, உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் புதிதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் கைதான இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் 2020 இல் களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன் கொலையில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சன், கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 8 ஆம் தேதி தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் கொடூரமாக வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
ஒருவர் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் என்றும், மற்றொருவர் நாகர்கோவில் மாலிக் தீனார் நகரைச் சேர்ந்த தெளஃபீக் என்றும் தெரியவந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரும் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்ததால், போலீசாரை பழிவாங்க இந்தக் கொலையை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது.
தேசிய புலனாய்வு முகமையின் கூற்றுப்படி, தௌஃபீக் மற்றும் அப்துல் ஷமீம் ஆகியோர் பெங்களூர் குருபனபள்ளயாவில் அல்-ஹிந்த் அறக்கட்டளையை உருவாக்கிய மெஹபூப் பாஷா வழங்கிய கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக் கொன்றனர்.
வில்சன் கொலைக்குப் பிறகு அவர்கள் தப்பிச் சென்றபோது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஹாசிப் தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் வசித்த தாஹா மற்றும் முசாவிர் ஆகிய இருவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஏப்ரல் 12 ஆம் தேதி அவர்கள் இருவரும் கைது செய்யப்படும் வரை தலைமறைவாக இருந்ததாகவும் என்.ஐ.ஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்எஸ்ஐ வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய கைத்துப்பாக்கியை வழங்கிய பாஷா, தமிழ்நாட்டின் ஐஎஸ்ஐஎஸ் மாட்யூலின் தலைவரான காஜா மொஹிதீனுக்கு ஆன்லைன் ஹேண்ட்லர் இணைப்பை அனுப்பியதற்கும் பொறுப்பு என்று என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக மொஹிதீன் தனது கூட்டாளிகளுடன் அல் ஹிந்த் அறக்கட்டளையில் சேர்ந்ததாக என்.ஐ.ஏ விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி செயற்பாட்டாளர் சுரேஷ் குமார் கொலையில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மொய்தீன், கர்நாடகா-தமிழ்நாடு வனப்பகுதியில் ஒரு தளத்தை அமைத்து சதி திட்டங்களை தீட்டி வந்தார். ஆனால் 2019 டிசம்பரில் ஜாமீனில் இருந்தபோது மர்மமான முறையில் தமிழ்நாட்டிலிருந்து மாயமான பிறகு, ஜனவரி 2020 இல் டெல்லியில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications