ஓயாத கோச்சடையான் பட விவகாரம்... லதா ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்
பெங்களூரு: கோச்சடையான் பட விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்த கோச்சடையான் படம் கடந்த 2014ம் ஆண்டு மே 23ம் தேதி வெளியானது. அனிமேஷன் முறையில் கதாபாத்திரங்களை கொண்ட இப்படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கினார்.

இப்படத்தை வெளியிடுவதற்கு முந்தைய தயாரிப்பு பணி மற்றும் வெளியீட்டு பொறுப்புக்கான உரிமம் பெங்களூருவை சேர்ந்த ஆட் பீரோ அட்வர்டைசிங் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
வெளியீட்டு உரிமத்திற்காக ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் இருந்து மொத்த கடன் தொகையாக ரூ.14.9 கோடியை பெற்றுக்கொண்டு, ஈராஸ் இன்டர்நேஷனல் என்ற வேறு ஒரு நிறுவனத்துக்கு உரிமத்தை மாற்றி வழங்கி விட்டதாக லதா ரஜினிகாந்த் மீது மேற்கண்ட நிறுவனம் பெங்களூரு புகார் அளித்தது.
வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்பு பணிக்காக லதா ரஜினிகாந்த் மூலம் போடப்பட்ட ஒப்பந்தத்தில் மொத்த தொகையில் ரூ.6.2 கோடி ரூபாயை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் ஆட் பீரோ நிறுவனத்தார் புகாரில் குறிப்பிட்டனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், பெங்களூரு காவல்நிலையம் கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட நிலையில் லதா ரஜினிகாந்த் ஆஜராகவில்லை. இந்தநிலையில், நேரில் ஆஜராகும் படி, லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications