100 நாள்.. 9 மணிநேர தூக்கம்.. ரூ.5 லட்சம் பரிசு வென்ற இளம்பெண்! 3வது சீசனுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
பெங்களூர்: 100 நாள் தினமும் 9 மணிநேரம் தூங்கி கொல்கத்தாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் ரூ.5 லட்சம் பரிசு வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். தற்போது 3வது சீசனுக்கு விண்ணப்பிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் என்பது மிகவும் முக்கியமானதாகும். தேசிய தூக்க அறக்கட்டளையின் வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
நீண்டகால தூக்கமின்மை என்பது உடல் சோர்வை ஏற்படுத்தும். மேலும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்குள் ஒருவரை தள்ளும்.
100 நாள் தூங்கும் போட்டி
இந்நிலையில் தான் பிரபல மெத்தை நிறுவனமாக வேக்பிட்(Wakefit.co) சார்பில் நிம்மதியான தூக்கம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது பொதுமக்கள் தூங்கும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியானது 100 நாள் நடக்கும். இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு நடக்கும். இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் தினமும் 9 மணிநேரம் இடையூறு இன்றி தூங்க வேண்டும்.
கொல்கத்தா இளம்பெண் வெற்றி
கடந்தாண்டு முதல் சீசன் நடந்து முடிந்தது. தற்போது 2வது சீசன் துவங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தான் தற்போது நடந்து முடிந்த 2வது சீசனுக்கான வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஹவுராவை சேர்ந்த 26 வயது இளம்பெண் திரிபர்ணா சக்ரபர்த்தி என்ற இளம்பெண் வெற்றி பெற்று, ‛இந்தியாவின் ஸ்லீப் சாம்பியன்' பட்டத்தை வென்றுள்ளார்.
ரூ.5 லட்சம் பரிசு
இந்த வெற்றியின் படி அவருக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. படுத்தஉடன் 10 முதல் 20 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும். அதன்பிறகு கண்விழிக்காமல் 9 மணிநேரம் வரை உறங்க வேண்டும் என்பன போன்ற உறங்கும் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் திரிபர்ணா சக்பர்த்தி அதிகம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதுதவிர 9 மணிநேர தூக்கத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளனரா? லேசான தூக்கத்தில் உள்ளனரா? என்பதை பார்த்து மதிப்பெண்கள் வழங்கி வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருடன் இறுதி போட்டியில் போட்டியிட்ட 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தூக்கம் அவசியம்
இதுபற்றி திரிபர்ணா சக்ரபர்த்தி கூறுகையில், ‛‛மொத்தம் 5.5 லட்சம் விண்ணப்பத்தாரர்களில் ஒருவராக நான் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தூக்கத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தூக்கத்தை கைவிடக்கூடாது. பணம் என்பது வாழ்க்கைக்கு தேவைதான் என்றாலும் மனஅமைதிக்காக 8 மணிநேர தூக்கம் கண்டிப்பாக வேண்டும்.
3 சீசன் துவக்கம்
இந்நிலையில் தான் தற்போது மூன்றாவது சீசனுக்கான தூக்கப்போட்டி நடத்தப்பட உள்ளது. Wakefit.co சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 100 நாட்களுக்கு தினமும் 9 மணிநேரம் தூங்கும் நபர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.