விஜய் மனசு வைக்கனும்.. நியூஸை கேட்டதும் ஷாக் ஆகும் மக்கள்! பெட்ரோலால் எகிறுது பிபி.. குறையுமா ’வாட்’
சென்னை: வரும் நாட்களிலும் பெட்ரோல் - டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் திணறும் மக்களுக்கு, இந்த எரிபொருள் விலை ஏற்றம் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மக்களின் சுமையை குறைக்கும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. தமிழக அரசு பெட்ரோலுக்கு ரூ.21.66-ம், டீசலுக்கு ரூ.17.85-ம் வாட் வரி வசூலிக்கும் நிலையில் அதனை சற்று குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம், விஜய், தேர்தல் முடிவுகள் சினிமா தகவல்களை பார்த்து வந்த மக்கள், இப்போது பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறதா?என்பதை பார்க்கின்றனர். அந்த அளவுக்கு எரிபொருள் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது.
கடந்த 11 நாட்களில் மட்டும் 4 முறை பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி. விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு
மேற்காசியாவில் வெடித்துள்ள போர் சூழல், குறிப்பாக ஈரான் - அமெரிக்கா மோதல் மற்றும் ஹார்முஸ் நீரிணை பிரச்சினை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 70 டாலரில் இருந்து 107.96 டாலர் வரை சென்றது. பின்னர் சற்றே குறைந்தாலும் இன்னும் அதிக விலையிலேயே உள்ளது. இந்த தாக்கம் இந்தியாவிலும் நேரடியாக தெரிகிறது.
எண்ணெய் நிறுவனங்கள்
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆரம்பத்தில் விலையை கட்டுப்படுத்தினாலும், பின்னர் கட்டாயமாக விலை உயர்வை அமல்படுத்த தொடங்கின. முதலில் லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தப்பட்ட பெட்ரோல் - டீசல் விலை, அதன்பிறகும் தொடர்ந்து ஏற்றம் கண்டது. நேற்று மட்டும் பெட்ரோல் ரூ.2.47, டீசல் ரூ.2.58 உயர்ந்தது. இதன் தாக்கம் வாகன ஓட்டிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. காய்கறி, மளிகை, பால், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் மெதுவாக உயர தொடங்கியுள்ளது.
விலைவாசி உயர்வு
காரணம், போக்குவரத்து செலவு அதிகரித்துவிட்டது. லாரி கட்டணம் உயர்ந்தால், அதன் தாக்கம் கடைசியில் பொதுமக்களின் பாக்கெட்டில்தான் விழும். இதேபோல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்திருப்பதால், வீட்டு செலவுகள் மட்டுமல்லாமல் ஓட்டல் மற்றும் உணவகங்களின் செலவும் அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கலால் வரி
மத்திய அரசு ஏற்கனவே கலால் வரியை குறைத்ததாக கூறினாலும், மாநில அளவிலான வாட் வரி காரணமாக பல மாநிலங்களில் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வாட் வரி அதிகமாக இருப்பதால், விலை உயர்வு மக்களிடம் நேரடியாக சுமையாக விழுகிறது. குஜராத், உத்தரபிரதேசம் போன்ற சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்ததால் அங்கு விலை ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது.
வாட் வரி
அதேபோல் தமிழக அரசும் மக்களின் சுமையை குறைக்கும் வகையில் வரி சலுகை அல்லது மாற்று நிவாரண நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மாநில அரசுகள் வரியை குறைத்ததால் குஜராத், உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102-க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் அங்கு குறைந்துள்ளது. தமிழக அரசு பெட்ரோலுக்கு ரூ.21.66-ம், டீசலுக்கு ரூ.17.85-ம் வாட் வரி வசூலிக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் 107 ரூபாய் 77 காசுக்கு விற்பனையாகிறது.
எரிபொருள் விலை
அதிலும் முக்கியமாக, உலக சந்தை நிலைமை இன்னும் சீராகாத நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவதாக கூறுகின்றன. இதனால் வரும் நாட்களிலும் பெட்ரோல் - டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் திணறும் மக்களுக்கு, இந்த எரிபொருள் விலை ஏற்றம் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மக்களின் சுமையை குறைக்கும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.














Click it and Unblock the Notifications