தண்ணீர் எல்லாம் தர முடியாது.. கறாராக பேசும் கர்நாடகா! வாயை விட்ட அமைச்சர்!
பெங்களூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கு போதுமான தண்ணீர் கொடுக்க முடியாது என்று கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 28 மாவட்டங்கள் காவிரி நீரை நம்பி இருக்கின்றன. மாநிலத்தின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 50% இந்த நீரை நம்பிதான் இருக்கிறது. இப்படி இருக்கையில் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா கூறியிருப்பது தமிழகத்தை அதிருப்தியடைய செய்திருக்கிறது.

என்ன சொன்னார் அமைச்சர்?
கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இது குறித்து கூறுகையில், "தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது என்பது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கையில்தான் இருக்கிறது. எங்களால் தன்னிச்சையாக தண்ணீர் திறந்துவிட முடியாது. கர்நாடகாவில் இந்த ஆண்டு பருவமழை வலுவிழந்துள்ளது. போதுமான மழை பெய்யவில்லை. எனவே தண்ணீர் தர முடியாது. இருந்தாலும் நாங்கள் ரகசியமாக தண்ணீர் திறந்து விடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதில் ரகசியமாக செய்ய எதுவும் இல்லை.
தமிழகத்திற்கு என்ன அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ! அந்த அளவில்தான் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதே நேரம் நாங்கள் எங்களுக்கு தேவையான தண்ணீரைதான் கேட்கிறோம். எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒரு சொட்டு கூட கூடுதலாக வேண்டாம்.
தமிழகத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த திட்டம் கர்நாடகாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கும் பலன் கொடுக்கும். தண்ணீரை சேமித்து வைத்து.. வறட்சி காலங்களில் அதை சீராக விநியோகிக்க மேகதாது அணை உதவும். நாங்கள் பெங்களூரின் குடிநீர் தேவை மற்றும் எங்கள் மாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம். அதே நேரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை பின்பற்றுவதும் அவசியம்" என்று கூறியிருக்கிறார்.
ஜூன் மாதம் 9.91 டிஎம்சி, ஜூலை மாதம் 32 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை வாரியம் உத்தரவு உள்ளது. ஆனால், அமைச்சர் ராமலிங்க ரெட்டி மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று தமிழக விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications