10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!
சென்னை: மலையாளத்திலும் தமிழிலும் பரிச்சயமான நடிகராக இருக்கும் பாலா, சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக திரையில் மாஸ், ஆக்ஷன், வில்லத்தனம் என பல முகங்களில் தெரியும் நடிகர் பாலா, இந்த முறை முற்றிலும் உடைந்த மனநிலையில் பேசியிருப்பது பலரையும் கலங்க வைத்திருக்கிறது.
"இதற்கு மேல் என்னால் முடியவில்லை... உண்மை வெளியில் வரக்கூடாதென்றால் விஷம் வைத்து என்னையும் என் மனைவியையும் கொன்றுவிடுங்கள்" என்று அவர் கூறியிருக்கும் வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உடைந்து பேசிய பாலா
இன்ஸ்டாகிராமில் நடிகர் பாலா பகிர்ந்த வீடியோவில் மலையாளத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிறார், கடந்த 10 ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் சந்தித்த மனவேதனைகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
"நான் படித்த காலத்தில் இருந்த வாழ்க்கை வேறு. இப்போது என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நான் மிகப்பெரிய வேதனையை அனுபவித்து வருகிறேன். பல உண்மைகளை சொல்ல முடியாமல் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு வாழ்ந்தேன். சிலரை காப்பாற்றவே நான் அமைதியாக இருந்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.
மீடியா குறித்து பேசும்போது பாலா தனது வேதனையை மறைக்கவில்லை. "நல்ல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சிலர் வெறும் வியூஸ்க்காக பொய்யான விஷயங்களை பெரிதாக்குகிறார்கள். தொடர்ந்து என்னைச் சுற்றி வரும் வழக்குகள், சர்ச்சைகள், தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகள் என நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த பேச்சு, எவ்வளவு நாட்களாக உள்ளுக்குள் அழுத்தத்தை சுமந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது.
சட்டம் இருக்கிறதா?
வீடியோவில் ஒரு கட்டத்தில் பாலா, "இந்த உலகத்தில் சட்டம் இருக்கிறதா? உண்மைக்கு மதிப்பு இருக்கிறதா? இனிமேல் யாராவது என்னைப்பற்றி தவறாக பேசினால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்து பிரஸ் மீட் வைத்து உண்மையை சொல்லுவேன்" என்று எச்சரித்துள்ளார். இதிலிருந்து அவர் மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பது தெளிவாக தெரிகிறது.

யார் இந்த நடிகர் பாலா?
பலருக்கு பாலா என்றால் வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த முகம் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் அதற்கு முன்பே தமிழில் அன்பு, அப்பா அம்மா செல்லம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான பாலா, மலையாள சினிமாவிலும் தனக்கென இடம்பிடித்தவர். ஹீரோவாகவும், குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் புயல்
பாலாவின் தனிப்பட்ட வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், பின்னர் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
அதன்பிறகு வாழ்க்கையில் புதிய அத்தியாயமாக மீண்டும் திருமணம் செய்து கொண்டாலும், பழைய பிரச்சனைகள், வழக்குகள், குற்றச்சாட்டுகள் என சர்ச்சைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.
ரசிகர்களை கலங்க வைத்த வீடியோ
திரையில் எப்போதும் தைரியமாக தோன்றும் ஒருவர், நிஜ வாழ்க்கையில் இவ்வளவு உடைந்து பேசுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"ஒரு மனிதனை நிம்மதியாக வாழ விடமாட்டீங்களா?", "இவ்வளவு வேதனை இருந்ததா?", "உடனே யாராவது அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு நடிகரின் பிரபல வாழ்க்கை வெளியே பிரகாசமாக தெரிந்தாலும், அதன் பின்னால் எவ்வளவு கண்ணீரும், மன அழுத்தமும் இருக்க முடியும் என்று பலரும் பேசி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications