ரூ. 6.84 கோடி கடன் விவகாரம்.. ரஜினிகாந்த மனைவி லதா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை
பெங்களூரு: ரூ. 6.84 கோடி கடன் வாங்க பரிந்துரை செய்து வழங்கிய ஆவணங்கள் போலியானது என்ற புகாரில் நடிகர் ரஜினிகாந்த் மனைவிக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் திங்கள் அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இயக்கிய படம் கோச்சடையான். மீடியா ஒன் குளோபல் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. பணம் போதவில்லை என்பதால் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் கடன் வாங்க முயற்சி மேற்கொண்டது.
இதற்காக மீடியா ஒன் குளோபல் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவிடம் உதவி கேட்டதாம். அப்போது லதா ரஜினிகாந்த், சில ஆவணங்களை கொடுத்து, ஆட் பியூரோ என்ற நிறுவனத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறார். லதா ரஜினிகாந்த் வழங்கிய ஆவணங்களை ஏற்று கொண்டு, ஆட் பியூரோ நிறுவனம் ரூ.6.84 கோடி கடன் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கடனை திரும்ப செலுத்த முடியாமல் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் திணறி உள்ளது. இதையடுத்து லதா ரஜினிகாந்திடம் கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆட் பியூரோ நிறுவனம், ''லதா ரஜினிகாந்த் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானது. இதனால் எங்களுக்கு ரூ.6.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பணத்தை லதா ரஜினிகாந்த் வழங்கவேண்டும்'' என்று பெங்களூரு அல்சூர்கேட் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து பெங்களூரு அல்சூர்கேட் போலீசார் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பெங்களூரு 2வது ஏ.சி.எம்.எம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று போலீசார் தரப்பில் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.