சென்னையை விட மோசம்.. பெங்களூரில் 5 கிமீ கடக்க 3 மணிநேரம்! மெயின் ரோட்லயே இப்படியா? நொந்த மக்கள்
பெங்களூர்: பெங்களூரில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக மழை காலங்களில் வாகனங்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதை நம்மால் பார்க்க முடியும்.அந்த வகையில் தான் நேற்று பெங்களூரின் முக்கிய சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவை கடக்க 3 மணிநேரம் வரை மக்கள் காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர்... இந்தியாவின் சிலிக்கான் வேலி என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டு வரும் நகராகும். இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக பெங்களூருவின் மையப்பகுதிக்கு நாம் செல்ல வேண்டும் என்றால் எலக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு உள்ளிட்ட இடங்களை தாண்டி தான் போக வேண்டும்.

இதனால் பெங்களூர் - ஓசூர் சாலையான இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் குறிப்பாக காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த சாலையில் பயணிப்பது என்பது சாதாரணமாக விஷயமாக இருக்காது. கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே தான் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டி இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் தான்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் பெங்களூரின் பல இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழை நேற்று காலை தொடர்ந்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. சில இடங்களில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கியது. இந்த மழை நீர் முக்கிய சாலைகளிலும் விட்டு வைக்கவில்லை. பன்னரகட்டா ரோடு, ஜெயதேவா சுரங்கபாதை, விண்ட் டனல் ரோடு, ரூபேன அக்ரஹாரா, துபாரஹள்ளி - குந்தலஹள்ளி ரோடு, அவுட்டர் ரிங் ரோடு உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சாலையில் தேங்கி நின்றது.

அதேபோல் எலக்ட்ரானிக் சிட்டி - சில்க் போர்டு இடையேயான ரோட்டிலும் ஆங்காங்கே மழைநீர் அதிகளவில் தேங்கி கிடந்தது. இதனால் இந்த சாலைகளில் எல்லாம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட நேரமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் வாகன ஓட்டிகளை அலர்ட் செய்து மாற்றுப்பாதைகளில் பயணிக்கும்படி கூறினர். இது மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்தது.
இந்நிலையில் தான் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து சில்க் போர்டு வரையிலான 5 கிலோமீட்டர் தொலைவை கடக்க 3 மணிநேரம் வரை நேரம் எடுத்து கொண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நேற்றைய தினம் பலரும் சாலைகளில் உள்ள மழை வெள்ளம், போக்குவரத்து நெரிசல் பற்றிய அப்டேட்டுகளை எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில் ‛நம்ம பெங்களூர்' என்ற பெயரில் இயங்கும் எக்ஸ் பக்கத்தில் இருந்து, ‛‛இன்று (அதாவது நேற்று) வேலைக்கு ‛லாங்க் டிராவல்' செய்து பயணிக்கும் நீங்கள் காலை உணவு + மதிய உணவு மட்டுமின்றி இரவு உணவையும் எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன்? என்று தெரிவித்து இருந்தார். அதாவது பெங்களூரில் பெய்த மழையால் மழை நீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உள்ளிட்ட விஷயங்களை மனதில் வைத்து அவர் இப்படி பதிவிட்டு இருந்தார்.
இதற்கு ஸ்ரீதர் சுவாமிநாதன் என்பவர் பதிலளித்து இருந்தார். மேலும் அவர் தனது கஷ்டத்தை நொந்துபோய் தெரிவித்தார். இதுதொடர்பாக ஸ்ரீதர் சுவாமிநாதன், ‛‛உங்களுக்கான உணவை நீங்கள் திட்டமிட்டு கொள்ளலாம். ஆனால் இயற்கை உபாதையை எப்படி சமாளிப்பது? இன்று மிக மோசமான நாள். எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து சில்க் போர்டுக்கு பஸ்சில் 3 மணிநேரம் ஆகிறது. இந்த பஸ்சில் வயதானவர்கள் அதிகம் உள்ளனர். உண்மையில் இந்த பயணம் அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது எக்ஸ் பக்கத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
எப்போதுமே சென்னையை விட பெங்களூரின் டிராபிக் என்பது அதிகமாக தான் உள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் நடந்த சம்பவமும் சென்னையை விட பெங்களூர் மோசம் என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. முன்னதாக கடந்த மாதம் இறுதியில் பெங்களூர் தொடர்பான இன்னொரு தகவல் வெளியாகி வைரலானது. அதாவது பிரிகேட் மெட்ரோ போலிசில் இருந்து கேஆர் புரம் ரயில் நிலையம் செல்ல ஒருவர் கூகுள் மேப்பை பயன்படுத்தினார். அப்போது அந்த கூகுள் மேப் காரில் செல்ல 44 நிமிடங்கள் ஆகும் எனவும், நடந்து சென்றால் 42 நிமிடங்களில் செல்லலாம் எனவும் காட்டியது. இத்தகைய சூழலில் தான் நேற்றைய தினம் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து சில்க்போர்டு வரையிலான 5 கிலோமீட்டர் தொலைவை கடக்க பஸ் 3 மணிநேரம் எடுத்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications