ஊரடங்கு தளர்வு.. தமிழ்நாட்டிலிருந்து உடனே வரிசை கட்டிய வண்டிகள்.. பெங்களூரில் 144 தடை உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவு தளர்வு அமலுக்கு வந்ததால், தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூர் நகருக்கு படை எடுத்தன. இதனால் அங்கு போக்குவரத்து டிராபிக் ஜாம் ஏற்பட்டது.
ஜூன் மாதம் 14 ஆம் தேதியான நேற்றுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைந்த நிலையில் அதை ஜூன் மாதம் 21ஆம் தேதி வரை நீட்டித்தது கர்நாடக அரசு.
ஆனால் பெங்களூர் நகர மாவட்டம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டன.

ஊரடங்கு தளர்வுகள்
இதன்படி பெங்களூரில் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்த கடைகள், மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளில் 50% பணியாளர்களுடன் வேலை நடக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து வந்த வாகனங்கள்
இந்தநிலையில்தான் பெங்களூரில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த பலரும் நேற்று முதல் வாகனங்களில் வர ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக ஓசூர் எல்லைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூர் நகரில் எலக்ட்ரானிக் சிட்டி முதல் பொம்மனஹள்ளி சில்க் போர்டு வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

டிராபிக் நெரிசல்
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் ஒரு நகரில், போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி டிராபிக் நெரிசலை சரி செய்யும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது என்றால் ஊரடங்கு எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுப்பதற்காக ஜூன் மாதம் 21ம் தேதி நள்ளிரவு வரை பெங்களூர் நகரம் முழுக்க 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அந்த நகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

3 இடங்களுக்கு விதி விலக்கு
விமான நிலையம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற இடத்தை தவிர்த்து பிற பகுதிகளில், நான்கு பேருக்கும் மேலாக கூடுவதற்கு இதன் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏன் போக்குவரத்து நெரிசல்
பெங்களூர் நகருக்குள் வருவோருக்கு கொரோனா சோதனை நடத்துவது கட்டாயமாக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்த நிலையில் அதற்குள்ளாக அங்கு சென்று சேர்ந்து விட வேண்டும் என்று பிற மாநிலங்களுக்கு சென்று இருந்த பெங்களூரில் பணியாற்றக்கூடிய நபர்கள் ஒட்டுமொத்தமாக ஊருக்கு திரும்புவதால் இதுபோல போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications