கண்டுகொள்ளப்படாத மயில்சாமி அண்ணாதுரை! விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன?
Recommended Video
பெங்களூர்: சந்திரயான் 2 திட்டத்தின், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை காண்பதற்கு, இஸ்ரோ சார்பில், ஓய்வுபெற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சந்திரயான்-1 நிலவில் வெற்றிகரமாக ஆய்வு செய்தது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. அந்த மாபெரும் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திரயான்-2 திட்டத்தின் ஆரம்ப காலத்திலும் அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் மயில்சாமி அண்ணாதுரை.

2018ஆம் ஆண்டு இஸ்ரோவில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவராக பணிபுரிந்து வருகிறார். தனது சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்குவதாக இருந்தது. அந்த நிகழ்வை காண்பதற்கு பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர்.
அதேநேரம் மயில்சாமி அண்ணாதுரை அங்கு இல்லை என்பதை பத்திரிக்கையாளர்கள் கவனிக்கத் தவறவில்லை.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்று, மயில்சாமி அண்ணாதுரையிடமே கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அவர், உண்மைதான். எனக்கு இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை, என்று சொல்லியதோடு நிறுத்திக் கொண்டார். அதற்குமேல் பேச அவர் விரும்பவில்லை.
இது குறித்து ஓய்வுபெற்ற இஸ்ரோ அதிகாரி ஒருவர், செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "மயில்சாமி அண்ணாதுரை தனது பணி காலத்தில் பெரும்பான்மையான பகுதிகளை செயற்கைக்கோள் பிரிவில் செலவிட்டுள்ளார்.
சந்திரயான்-1 திட்ட இயக்குனராக பணியாற்றி நாட்டுக்கு புகழை தேடித் தந்தார். இதுபோன்ற அறிவு மிக்கவர்களை பயன்படுத்திக் கொள்வது அவசியம். ஏனெனில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், விண்வெளி விஞ்ஞானிகள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications