மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மேகதாது அணை- கர்நாடகா சித்தராமையா பிடிவாதம்- திமுகவுக்கு நெருக்கடி!
பெங்களூர்: மத்தியில் காங்கிரஸ் தலைமையில் "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதியளித்துள்ளார். கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் இந்த வாக்குறுதி தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை தந்துள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உச்சகட்ட பிரசாரம் நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அனுமதிக்கமாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்தல் அறிக்கையை கர்நாடகாவில் ஆளுகிற- திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு.
இதனிடையே கர்நாடகாவில் பெங்களூர் தெற்கு தொகுதியில் அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில், கர்நாடகா காங்கிரஸ் அரசு மக்களுக்கான நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும். இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். பெங்களூரில் தற்போது 60% பேருக்குதான் காவிரி குடிநீர் கிடைக்கிறது. பெங்களூரில் அனைவருக்கும் காவிரி நீர் கிடைக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம். இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. கர்நாடகாவில் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26-ந் தேதி நடைபெறும். அங்கு 2-வது கட்ட வாக்குப் பதிவு மே 7-ந் தேதி நடைபெற உள்ளது. பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும். இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்து இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications