கொரோனா.. தத்தளிக்கும் பெங்களூர்.. பாசிட்டிவ் விகிதம் 55% ஆக அதிகரிப்பு.. முழு ஊரடங்கு வருகிறது
பெங்களூர்: கொரோனா பாதிப்பு காரணமாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் தத்தளித்து வருகிறது அங்கு பரிசோதனை செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
அதாவது 55 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் மே 12ம் தேதி முதல் முழு லாக்டவுனை கர்நாடகா முழுக்க பிறப்பிக்க திட்டமிட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மீண்டும் முழு ஊரடங்கு?.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க!
இப்போது காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறி நபர்கள்
அறிகுறி இருக்கும் நபர்களை மட்டுமே சோதிக்கும் அரசின் முடிவு, கொரோனா விகிதங்கள் பெங்களூரில் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மோசமான நிலை
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை 40,128 கோவிட் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், 22,112 பாசிட்டிவாக வந்துள்ளது. மே முதல் மூன்று நாட்களில் சராசரி தினசரி பாசிட்டிவ் விகிதம் 45% என்ற அளவுக்கு இருந்தது. அது தற்போது அதிகரித்துள்ளது.
அதிகரித்த பாதிப்பு
கடந்த வார நிலவரப்படி, பெங்களூரில் பாசிட்டிவ் ரேட் 12 சதவீதமாக இருந்தது. அப்போது, 20,82,897 சோதனைகள் நடத்தப்பட்டன, மார்ச் மாதம் 13,78,753 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பாசிட்டிவ் ரேட் 2.31 சதவீதமாக இருந்தது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் பாசிட்டிவ் ரேட் மிக அதிகமாக 23.8 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது அதையும் தாண்டி மோசமான நிலைக்கு வந்துள்ளது.
படுக்கை பற்றாக்குறை
நகரத்தின் வெவ்வேறு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் படுக்கைகளைத் தேடி தினமும் குறைந்தது 500 நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆம்புலன்ஸ்களில் சென்று காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் படுக்கை வசதி இல்லாமல் திருப்பியனுப்பப்படுகிறார்கள். பலரும் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர்.