அடுத்தடுத்து சர்ச்சை! உகாதி கொண்டாட்டத்தின் போது... இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்! பரபரக்கும் கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் உகாதி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்தடுத்து சர்ச்சை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் அங்கு பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஹலால் கறி விவகாரம் பேசுபொருள் ஆனது. இந்துக்கள் ஹலால் கறியைப் புறக்கணிக்க வேண்டும் என்று அங்குள்ள சில வலதுசாரி அமைப்புகள் தீவிர பிரசாரம் செய்தன.

கர்நாடகா
இந்நிலையில், கர்நாடகாவில் மற்றொரு வகுப்புவாத சம்பவமாக, யாரடோனா கிராமத்தில் உகாதி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பிற்கும் இடைய ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது. அங்குள்ள மசூதிக்கு அருகே ஸ்பீக்கரில் பாடல்கள் ஒலிபரப்பிய விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. ஜாமியா மஸ்ஜித் அருகே நடைபெற்ற இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

போலீஸ்
இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்த மோதலில் குறைந்தது இரண்டு முஸ்லிம்கள் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், மசூதி தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும் கூட, ராய்ச்சூர் போலீசார் குறைந்தது 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

புகார் இல்லை
தாக்குதல் தொடர்பாக இணையத்தில் பரவி வரும் வீடியோ ஒன்றில், மசூதிக்கு அருகில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறுவதும் தெளிவாகக் கேட்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் இந்த மோதல் நடந்துள்ளது என்றும் இருப்பினும் இது தொடர்பாகப் புகார் அளிக்க யாரும் முன்வரவில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலீசார் பிளான்
மாவட்ட எஸ்.பி நேரடியாக அப்பகுதி மக்களைச் சந்தித்த போதிலும், யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை என்றும் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிஆர்பிசி பிரிவுகள் 107 மற்றும் 151 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிலரைக் கைது செய்து விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
|
தாக்குதல்
முன்னதாக கடந்த வாரம் கர்நாடகாவின் ஹொசமானே பகுதியில் ஹலால் இறைச்சிக்கு எதிராக பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலர் பிரசாரம் செய்து வந்துள்ளனர். அப்போது அங்கிருந்து முஸ்லிம் இறைச்சி வியாபாரி தௌசிப் என்பவரிடம் ஹலால் செய்யப்படாத இறைச்சியை விற்குமாறு வலியுறுத்தி உள்ளனர். அத்தகைய இறைச்சி தயாராக இல்லை என்றும், அதை ஏற்பாடு செய்வதாகவும் இறைச்சி வியாபாரி தௌசிப் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் தௌசிப்பை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications