அதிகாலை திடீரென மருத்துவமனையில் குவிந்த 1000+ பேர்.. கர்நாடகாவில் அதிகரிக்கும் மாரடைப்பால் அச்சம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் சில வாரங்களில் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இது அங்குள்ள மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே அங்குள்ள மருத்துவமனைகளில் இதயப் பரிசோதனை செய்ய மக்கள் குவிந்து வருகிறார்கள். ஒரே நேரத்தில் பல நூறு பேர் மருத்துவமனையில் திரண்டுள்ளதால் சிகிச்சை தருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் திடீரென மாரடைப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அங்குள்ள ஹசன் மாவட்டத்தில் சில வாரங்களில் 20+ பேர் மாரடைப்பால் உயிரிழந்தது சர்ச்சையானது. கொரோனா தடுப்பூசி இதற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லி விசாரிக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.

மாரடைப்பு மரணங்கள்
மாரடைப்பு தொடர்பான இறப்புகள் அதிகரித்து வருவதால், கர்நாடகாவில் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இதன் காரணமாக மைசூரில் உள்ள பிரபலமான ஜெயதேவா மருத்துவமனைக்குத் திடீரென ஒரே நேரத்தில் பல நூறு பேர் இதயப் பரிசோதனைக்காகப் படையெடுத்துள்ளனர். மருத்துவமனையில் காலை முதலே நோயாளிகள் ஓபி வார்ட்டில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதனால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பரிசோதனை செய்தால் மட்டும் பிரச்சனை தீராது
இது மைசூர் ஜெயதேவா மருத்துவமனையின் டாக்டர் கே.எஸ். சதானந்தா பிரபல ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், "ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் பீதியடைந்து மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர். மருத்துவமனையில் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வதால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடாது. அதேநேரம் டெஸ்ட் செய்து ஆபத்தைத் தெரிந்து கொள்வது முக்கியம். அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் மக்கள் இதயப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
வாழ்க்கை முறை மாற்றம் தேவை
பரிசோதனை பிரச்சனையைத் தெரிந்து கொள்ள உதவும் என்றாலும் எதிர்காலப் பிரச்சனைகளைத் தடுக்க முடியாது. வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை; நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்கச் சீரான உடற்பயிற்சி அவசியம். எல்லாரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்குப் படையெடுத்தால், ஏற்கனவே இருக்கும் இதய நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது கடினமாகிவிடும். எனவே, மக்கள் ரொம்ப பயப்பட வேண்டாம்" என்றார்.
பின்னணி
கடந்த மாதம் 40 நாட்களில் ஹசனில் 23 மாரடைப்பு தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில், ஆறு பேர் 19 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள், எட்டுப் பேர் 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இந்த மாரடைப்பு செய்திகளைத் தொடர்ந்து, ஜெயதேவா மருத்துவமனையில் நோயாளிகளின் வருகையை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹசன் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பரிசோதனை செய்து கொள்ள வந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கர்நாடகா அரசு இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கவனித்து வருவதாக முதல்வர் சித்தராமையா உறுதியளித்தார். இந்த இறப்புகளுக்கான காரணத்தை ஆராய டாக்டர் கே.எஸ்.ரவீந்திரநாத் தலைமையில் ஒரு குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது. அந்தக் குழு சமீபத்தில் தனது அறிக்கையை அரசு சமர்ப்பித்தது. அதில், ஹசன் விவகாரம் குறித்து தனியாக ஆராய வேண்டும் உட்படப் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications