அம்பிகை இந்த அகிலத்தின் தலைவியல்லவா.. மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மாதம் ரூ.2000 வழங்க முடிவு
பெங்களூர்: கர்நாடகாவில் க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மைசூர் சாமூண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி தேவிக்கும் ரூ.2 ஆயிரம் அனுப்ப அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தில் 5 முக்கிய வாக்குறுதிகளை அளித்து இருந்தது. இந்த வாக்குறுதிகள் தான் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதாவது அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரிசி இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 2 ஆயிரம் அளிக்கும் க்ருஹ லட்சுமி திட்டம், மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், டிகிரி முடித்து வேலைஇல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், பட்டயபடிப்பு முடித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்து இருந்தது.
இந்த திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி மைசூரில் தொடங்கப்பட்டது. மைசூர் சாமுண்டி மலையில் உள்ள சாமூண்டேஸ்வரி அம்மனுக்கு ரூ.2 வழங்குவதன் மூலம் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த திட்டம் வெற்றி அடைய கடவுளுக்கு அர்ப்பணிப்பதாககவும் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், டிகே சிவக்குமாரும் கூறினர். இந்த திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மாதம் தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு பெண் தெய்வமான மைசூரு சாமுண்டீஸ்வரியும் சேர்க்கப்பட்டுள்ளார். கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) கேட்டுக்கொண்டதன் பேரில், மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மாதம் தோறும் 2 ஆயிரம் வழங்க துணை முதல்வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி,இனி மாதம் தோறும் கோவிலின் வங்கிக் கணக்கில் க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக எம்எல்சியும், காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவின் கர்நாடகா துணை தலைவருமான தினேஷ் கோலிகவுடா கூறுகையில், ‛‛ பெண் தெய்வமான மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என டிகே சிவக்குமாருக்கு கடிதம் எழுதினேன். எனது கோரிக்கையை ஏற்று அவர் ஒப்புதல் அளித்துள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications