மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென உடைந்த இணைப்பு.. பிரிந்துபோன பெட்டிகள்! பதறிய பயணிகள்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ராம்நகர் ரயில் நிலையத்தில் மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது, இணைப்பு உடைந்ததால் பெட்டிகள் திடீரென பிரிந்து சென்றது. இதை பாரத்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். நல்ல வேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மைசூரு தூத்துக்குடி விரைவு ரயில் நேற்று இரவு பெங்களூரு நோக்கிச் சென்றது. இரவு 8 மணியளவில் ராமநகர ரயில் நிலையத்தை ரயில் அடைந்தது. அப்போதுதான் இந்த பிரச்சனை நடந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரபல ஊடகத்திடம் பேசிய ரயில்வே அதிகாரிகள், மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கெண்டிருந்த போது திடீரென பெட்டியை இணைக்கும் இணைப்பு கம்பி உடைந்தது. இதனால் பெட்டி எண் 5 மற்றும் 6 ஆகியவை தனியாக கழன்றன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த ரயிலில் பெங்களூரு நோக்கிச் சென்ற பயணிகள், ஹம்பி எக்ஸ்பிரஸ் மற்றும் தலகுப்பா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர். தூத்துக்குடிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், தேவையான பழுதுபார்ப்புப் பணிகளுக்குப் பிறகு அதே ரயிலில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பெங்களூரு - மைசூரு ரயில் இயக்கம் பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்

இதனிடையே பெங்களூரு கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளர் ஷியாம் சிங் இதுபற்றி கூறும் போது. "ரயில் மைசூரிலிருந்து பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சில தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் ஏற்பட்டது. இதனால் ராம் நகரில் பெட்டிகள் பிரிந்தன. உடனடியாக சிக்கலை கண்டுபிடித்து , ரயில்வே இன்ஜினியர்கள் சிக்கலைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார். ரயில் பெட்டிகள் தனியாக கழன்றதால் ராம்நகர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications