"ரொம்ப ஓவரா போகுதே.." இன்டர்வியூவை விட மோசம்.. வீட்டை வாடகை தர பெங்களூரில் ஓனர் கேட்ட கேள்விகள்!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் வீட்டு வாடகைக்கு எடுக்கப் போன ஸ்டார்ட்அப் உரிமையாளர் தனக்கு நேர்ந்த கதியை ட்விட்டரில் புலம்பித் தள்ளியுள்ளார். இது இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் நமக்குத் தலையே சுற்றிவிடும். ஏதோ வெளிநாடுகளில் நடப்பது போன்ற பல சம்பவங்கள் பெங்களூரில் அரங்கேறி வருகிறது.
குறிப்பாக வீட்டின் உரிமையாளர்கள் அங்குச் செய்யும் செயல்களை எல்லாம் தனியாகவே ஒரு பட்டியல் போடலாம். அதுபோல ஒரு வினோதமான சம்பவம் தான் இப்போது பெங்களூரில் நடந்துள்ளது.

கண்டிஷன்கள்: பெங்களூர் எந்தளவுக்கு அதன் ஐடி நிறுவனங்களுக்குப் புகழ் பெற்று இருக்கிறதோ.. அதே அளவுக்கு அங்குள்ள மோசமான டிரஃபிக்கிற்கும் மோசமான வீட்டின் உரிமையாளர்களுக்கும் பெயர் பெற்றது. அங்கே வீட்டின் உரிமையாளர்கள் போடும் கண்டிஷன்கள்.. வீடே வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தெறித்து ஓடும் அளவுக்கே இருக்கும். பேட்சுலர்களுக்கு என்றால் எண்ணற்ற கண்டிஷன்கள் அடுக்கிவிடுவார்கள்.
அதிலும் ஐடி ஊழியர்களுக்குப் பெங்களூர் வீடுகளின் உரிமையாளர்கள் போடும் ரூல்ஸை பார்த்தால் ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும்.. தங்கள் வீட்டின் உரிமையாளர்கள் தங்களைப் படுத்தும் பாட்டை அவர்கள் சமூக வலைத்தளங்களில் தான் கொட்டி தீர்த்து வருகின்றனர். அப்படி இப்போது அங்கே வீட்டை வாடகைக்குக் கேட்டுச் சென்ற இளைஞருக்கு நம்பவே முடியாத சில சம்பவங்கள் நடந்துள்ளன.
புலம்பிய தள்ளிய இளைஞர்: பெங்களூரில் முக்கிய பிரச்சினையாக மாறி வரும் இந்த விவகாரத்தில் தனக்கு நேர்ந்த சம்பவங்களை நீரஜ் மென்டா என்ற அந்த நபர் நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார். இவர் அங்கே ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு வீட்டை வாடகைக்குத் தர அவரது உரிமையாளர் நேர்காணலை வைத்துள்ளார். தனது முதலீட்டாளர்கள் கேட்ட கேள்விகளை விட அதிக கேள்விகளை உரிமையாளர் கேட்டதாக அவர் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "எனது ஸ்ராட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் நடத்திய நேர்காணலை விட எனது வீட்டின் உரிமையாளர் நடத்திய நேர்காணல் கடினமாக இருந்தது. நீண்ட நேரம் நீட்டித்த இந்த நேர்காணலில் அவர் பல்வேறு கேள்விகளைக் கேட்டார். நான் சமீபத்தில் பெங்களூரில் வீட்டை வாடகைக்குத் தேட தொடங்கினேன்.. அப்போது ஒரு வீட்டின் உரிமையாளர் ஓகே சொல்வதற்கு முன்பு நேர்காணலை நடத்த விரும்பினார்.
ரொம்ப ஒவர்: அதில் ஏகப்பட்ட கேள்விகளை அவர் கேட்டார்.. இதில் விஷயம் என்னவென்றால் நேர்காணலுக்கு முன்பு புரோக்கர் மூலம் எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் குறித்த தகவல்களைக் கேட்டு வாங்கிக் கொண்டார். மேலும், எனது லிங்க்ட்இன் ஐடிக்களையும் கூட வாங்கினார். எனது பிஸ்னஸ் குறித்த டேட்டா பாயிண்டகளை வாங்கிக் கொண்டார். பல பேர் இப்படி அனுப்புவார்கள் போல.. எங்கள் பெயர் ஷார்ட்லிஸ்ட் ஆனதும் நேர்காணலுக்கு அழைத்தார்.
அதில் அவர் எனது பின்னணி, குடும்ப உறுப்பினர்கள் என ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டார். அது கூட ஓகே.. ஆனால் அதன் பிறகு அவர் ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்துக் கேட்கத் தொடங்கினார். பிசினஸ் மாடல், பர்ன் ரேட், முதலீட்டாளர்கள் யார் என்பதெல்லாம் கூட கேட்டார் (என்னிடம் ஏற்கனவே பெற்ற டேட்டா பாயிண்ட்களை வைத்து அவர் கேள்விகளை ரெடியாக வைத்திருந்தார்)" என்று அவர் புலம்பித் தள்ளியுள்ளார்.
கேள்வி: அந்த உரிமையாளரின் செயல்பாடுகளை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நேர்காணல் என்ற பெயரில் போலீஸ் விசாரணைக்கு இணையாக அவர் நடந்து கொண்டுள்ளதாகப் பலரும் சாடி வருகின்றனர். இவ்வளவு நடந்த பிறகு இவருக்கு வீடு கிடைத்ததா இல்லையா என்று மற்றொரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications