பயங்கரவாத நெட்வொர்க் வழக்கு.. தென் இந்தியாவில் 19 இடங்களில் என்ஐஏ ரெய்டு! டார்கெட் பெங்களூரா?
பெங்களூர்: பயங்கரவாத அமைப்பு தொடர்பாக தென் இந்தியாவில் மட்டும் 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 40 க்கும் அதிகமான இடங்களில் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்புடையவர்கள் இருப்பதாக கூறி தீவிர சோதனை மேற்கொண்டது. மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டது. பட்கா போரிவாலி, தானே, மிரா சாலை, புனே உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அதேபோன்று கர்நாடகா தலைநபர் பெங்களூரிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையில் 15 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் பணம், ஆயுதங்கள், முக்கிய ஆவணங்கள், ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து என்.ஐ.ஏ வெளியிட்ட அறிக்கையில், 2 ஏர் துப்பாக்கிகள், 9 வாள்/ கத்திகள், 2 லேப்டாப்புகள், 6 ஹாட் டிஸ்குகள், 3 சிடிக்கள், 39 செல்போன்கள், 10 புத்தகங்கள், ரூ.68 லட்சம் ரூபாய் ரொக்கம், ஹமாஸ் இயக்கத்தின் 51 கொடிகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் இன்று பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக காலை முதல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தென் இந்தியாவில் மட்டும் 19 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள சுல்தார் பல்யா, ஜேசி நகர், சின்னப்பா கார்டன், புலகேசி நகர் உள்ளிட்ட 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று டெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு வருவதாக கூறப்படுகிறது. எந்த அமைப்பை குறிவைத்து என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்படுகிறது? டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்து உள்ளது.












Click it and Unblock the Notifications